தயாராகும் அணிகள்
கடந்த மார்ச் மாதம் துவங்க வேண்டிய 2020 ஐபிஎல் தொடர் கால தாமதமாக வரும் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. அந்த தொடருக்கான முன்னேற்பாடுகளை பிசிசிஐ தீவிரமாக செய்து வருகிறது. ஐபிஎல் அணிகள் தனிப்பட்ட முறையில் தயாராகி வருகின்றன.
பிசிசிஐ நிலை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த உள்ளது பிசிசிஐ. தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் கடும் பாதுகாப்புக்கு இடையே இந்த தொடரை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது பிசிசிஐ.
பயிற்சி இல்லை
மறுபுறம் இந்திய வீரர்கள் கடந்த ஐந்து மாதமாக கிரிக்கெட் பயிற்சி இன்றி முடங்கி உள்ளனர். சில வீரர்கள் மட்டும் கடந்த சில நாட்களாக தனிப்பட்ட முறையில் பயிற்சியை துவக்கி உள்ளனர். எனினும், முழுவீச்சில் பயிற்சி முகாம் நடத்துவது அவசியம் ஆகும்.
பயிற்சி முகாம்
பிசிசிஐயால் அனைத்து இந்திய அணி வீரர்களுக்கும் பயிற்சி முகாம் நடத்த முடியாத நிலை இருக்கிறது. அதனால், ஐபிஎல் அணிகள் தங்கள் அணி வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு வருகின்றன.
சிஎஸ்கே திட்டம்
ஆகஸ்ட் 20 அன்று அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டு வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஆகஸ்ட் 10 அன்றே கிளம்ப திட்டமிட்டது. தோனி உட்பட அனைத்து வீரர்களும் ஒன்றாக செல்ல இருந்தனர்.
ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு
எனினும், ஐபிஎல் நிர்வாகக் குழு அந்த திட்டத்துக்கு முடிவு கட்டி உள்ளது. இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பிசிசிஐ ஐபிஎல் அணிகளுக்கு அளிக்கவில்லை. அந்த விதிமுறைப் புத்தகம் தயாராக 2 நாட்கள் ஆகும் என ஐபிஎல் நிர்வாகம் கூறி இருக்கிறது.
ஒரு வாரம் ஆகும்
மேலும், அதன்படி முழு திட்டத்தையும் தயார் செய்து விட்டு வார இறுதியில் சந்தேகங்களை நிவர்த்தி செய்த பின்னரே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முடியும் என ஐபிஎல் நிர்வாகக் குழு சிஎஸ்கே அணியிடம் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
திட்டம் நிறைவேறாது
ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவால் முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியை துவக்கலாம் என்ற சிஎஸ்கே அணியின் திட்டம் நிறைவேறாமல் போயுள்ளது. மற்ற அணிகளுடன் ஆகஸ்ட் 20 அன்றே சிஎஸ்கே அணியும் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
48 மணி நேரம்
அது மட்டுமின்றி, தோனி உட்பட அனைத்து வீரர்களும் சென்னைக்கு வர உள்ளனர். அங்கே அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் 48 மணி நேரத்தில் வீரர்கள் விமானத்தில் பயணத்தை துவக்குவர்.
விசா நடைமுறைகள்
மேலும், அனைத்து வீரர்களுக்கும் விசா எடுக்க வேண்டி சிஎஸ்கே முயன்று வருகிறது. மத்திய அரசு அனுமதி அளித்த பின்னரே விசா நடைமுறைகளை துவக்க உள்ளது சிஎஸ்கே அணி. அனைத்து ஐபிஎல் அணிகளும் சுமார் மூன்று வார காலம் பயிற்சி செய்யும் வகையில் திட்டமிட்டு வருகின்றன.