2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29 முதல் துவங்க உள்ளது. இந்த முறை 50 நாட்களுக்கு லீக் சுற்று மட்டுமே நடக்க உள்ளது. மிக நீண்ட ஐபிஎல் தொடராக நடக்க உள்ளது. இறுதிப் போட்டி மே மாதம் 24 அன்று நடைபெற உள்ளது.
ஆல் - ஸ்டார்ஸ் போட்டி
இந்த முறை ஐபிஎல் தொடருக்கு முன் நிவாரண நிதி திரட்டும் போட்டியாக ஒரு பிரம்மாண்ட போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி. அதன் பெயர் ஐபிஎல் ஆல் - ஸ்டார்ஸ் என கூறப்பட்டு வந்தது. இது குறித்த தகவல்கள் கடந்த மாதம் வெளியானது.
இரண்டு அணிகள் எப்படி?
அதன்படி, எட்டு ஐபிஎல் அணிகள் வடக்கு - கிழக்கு, தெற்கு - மேற்கு என இரு அணிகளாக பிரிக்கப்படும். அந்த இரு அணிகள் இடையே ஒன்று அல்லது மூன்று போட்டிகள் கொண்ட சிறிய டி20 தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
எந்தெந்த அணிகள்?
தென் மேற்கு அணியில் சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளின் வீரர்கள் பங்கேற்பார்கள். அதே போல, வடகிழக்கு அணியில் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளின் வீரர்கள் ஆடுவார்கள் என கூறப்பட்டது.
கேப்டன்கள் யார்?
இந்த இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டால், இதற்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற விவாதம் அப்போது சூடு பிடித்தது. வட கிழக்கு அணியை விட, தென் மேற்கு அணி குறித்து தான் அதிகம் பேசப்பட்டது. காரணம், இந்த அணியில் தோனி கேப்டனாக இருப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
எகிறிய எதிர்பார்ப்பு
மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தோனி கேப்டன்சியில் ரோஹித் சர்மா, மற்றும் விராட் கோலி அவருக்கு கீழ் ஆடுவார்கள் என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும், சிறந்த வீரர்கள் மட்டுமே இரண்டு அணிகளிலும் பங்கேற்பார்கள் என்பதும் ஒரு காரணம்.
ஆல் - ஸ்டார்ஸ் நடக்காது?
ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் ஆல் - ஸ்டார்ஸ் போட்டி நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது. தென்னிந்திய ஐபிஎல் அணி ஒன்றின் அதிகாரி கூறுகையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன் ஆல்-ஸ்டார்ஸ் போட்டி நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.
பிசிசிஐ அமைதி
2௦20 ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள பிசிசிஐ, இதுவரை ஆல்-ஸ்டார்ஸ் போட்டி குறித்து எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது. அதனால், நிச்சயம் 2020 ஐபிஎல் தொடரில் ஆல்-ஸ்டார்ஸ் போட்டி நடப்பது சந்தேகம் தான்.
என்ன காரணம்?
இந்த தொடருக்கு முன் ராஜஸ்தான் அணி தன் சொந்த மைதான போட்டிகளை கவுஹாத்தி மைதானத்தில் ஆட விரும்புகிறது. ஆனால், அது தொடர்பாக ஒரு வழக்கு நடந்து வருகிறது. மறுபுறம், ஏப்ரல் 1 முதல் தான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார்கள்.
முதல் போட்டி
முதல் போட்டி மார்ச் 29 அன்று துவங்குகிறது, அதற்கு முன், ஆல்-ஸ்டார்ஸ் போட்டி நடத்தினால் அதில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாது. அதனால், பிசிசிஐ அந்த திட்டத்தை கைவிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கங்குலியின் இந்த பிரம்மாண்ட திட்டம் அடுத்த ஐபிஎல்-இல் நிறைவேறுமா?