கொரோனா வைரஸ் பாதிப்பு
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்குவதாக இருந்தது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தது பிசிசிஐ. கொரோனா வைரஸ் பிப்ரவரி மாதத்தில் சீனாவில் உச்ச நிலையை அடைந்தது. அப்போது பிசிசிஐ, ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என நம்பிக்கையுடன் இருந்தது.
அதிக பேர் பலி
ஆனால், மார்ச் துவக்கத்தில் உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இத்தாலி நாட்டில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகினர். அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
காரணம் இதுதான்
அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு காரணம், கொரோனா தாக்குதல் மட்டுமில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருவதால் மத்திய அரசு புதிய விசாக்களை முடக்கி உள்ளது. அதனால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்பதே அந்த தள்ளி வைப்புக்கு முக்கிய காரணம்.
500 பேருக்கு பாதிப்பு
அதன் பின் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகமானது. 100க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 500 பேரையும் தாண்டி சென்றுள்ளது. அதனால், நாட்டில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
21 நாட்கள் கட்டுப்பாடு
கொரோனா பாதிப்பு நிலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு அடுத்த 21 நாட்களுக்கு (ஏப்ரல் 15 வரை) நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கூறி கொண்டுள்ளது. அதனால், அனைத்து தொழில் துறைகளும் முடங்கி உள்ளது.
ஐபிஎல் நிலை
இந்த நிலையில், ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15க்கு பின் நடத்துவதை குறித்து கூட சிந்திக்க முடியாத நிலையில் உள்ளது பிசிசிஐ. மே மாதத்தில் தொடரை துவக்க வேண்டும் என்றால் கூட ஏப்ரல் 15 முதலே அதற்கு திட்டமிட வேண்டும்.
சாத்தியம் இல்லை
ஆனால், இந்தியாவில் 500 மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, நாடே முடங்கி உள்ள நிலையில், ஐபிஎல் தொடரை நடத்துவது எல்லாம் சாத்தியமே இல்லை என்பதை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் நன்கு உணர்ந்துள்ளன.
ஒரே வழி இதுதான்
இந்த நிலையில், பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் செவ்வாய் அன்று நடத்தவிருந்த ஐபிஎல் குறித்த விவாதக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனேகமாக ஐபிஎல் தொடரை ரத்து செய்வது மட்டுமே ஒரே வழி என்ற நிலைக்கு பிசிசிஐ வந்து விட்டதாகவே தெரிகிறது.
அதே நிலை தான் உள்ளது
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து கேட்ட போது, "இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் தள்ளி வைத்த போது என்ன நிலையில் இருந்தோமோ, அதே நிலையில் தான் இருக்கிறோம்" என கூறினார்.
நொந்து போன கங்குலி
மேலும், "கடந்த 10 நாட்களில் எதுவும் மாறவில்லை. எனவே, என்னிடம் எந்த பதிலும் இல்லை. அதே நிலை நீடிக்கிறது" என நொந்து போய் கூறினார் பிசிசிஐ தலைவர் கங்குலி. போகிற போக்கை பார்த்தால், அடுத்து ஐபிஎல் தொடர் ரத்து என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகக் கூடும்.