2020 ஐபிஎல் தொடர் தள்ளிவைப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாத மத்தியில் தள்ளி வைக்கப்பட்டது. மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டது. எப்போது துவங்கும் என பிசிசிஐ அறிவிக்கவில்லை.
விசா மறுப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தீவிரமாக பரவி வருவது மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்தியா ஏப்ரல் 15 வரை விசா மறுத்ததும் ஐபிஎல் தொடரை தள்ளி வைக்க முக்கிய காரணமாக அமைந்தது.
கிரிக்கெட் பாதிப்பு
இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. ஐபிஎல் தொடர் இனி எப்போது நடக்கும் என்ற கேள்வி தொடர்ந்து பிசிசிஐயிடம் கேட்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் லாக்டவுன்
இந்தியாவில் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, அமலில் உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், மீண்டும் இந்தியாவில் லாக்டவுன் நீடிக்கப்படலாம் என தெரிகிறது.
மோடி உரை
பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்கள் இடையே உரையாற்றுவார் என்றும், அப்போது அவர் லாக்டவுன் நீட்டிப்பு பற்றி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின் பிசிசிஐ ஐபிஎல் தொடரை அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கும் அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகிறது.
லாக்டவுன் நீட்டிப்பு
"தற்போது நிச்சயமற்ற நேரம் நிலவுகிறது. இந்த வார இறுதியில் பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. லாக்டவுன் நீட்டிப்புக்கான வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கிறோம். இந்த கட்டத்தில், மத்திய அரசின் மனதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது." என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் மை-கேல் (MyKhel) இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஐபிஎல் பற்றி விரைவில் முடிவு
"அரசு லாக்டவுன் நீட்டிப்பை அறிவித்தால், எத்தனை நாட்கள் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பதைக் காண நாங்கள் காத்திருக்கிறோம். எனவே, 2020 ஐபிஎல் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்" என்றார் அந்த பிசிசிஐ அதிகாரி. என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரத்து செய்ய வாய்ப்பு இல்லை
"கொரோனா தொற்று பரவும் வேகத்தை கணக்கில் கொண்டு, இந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஐபிஎல் தொடரை நடத்த மெலிதான நம்பிக்கை இருப்பதால், ஐபிஎல் தொடரை முற்றிலும் ரத்து செய்ய வாய்ப்பு இல்லை." என்றார் அவர்.
குறுகிய ஐபிஎல் தொடர்
மேலும் "எனவே, ஐபிஎல் நிர்வாகம், குறுகிய ஐபிஎல் தொடரை, ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் வைத்து நடத்தலாம். ஆனால், இந்த கட்டத்தில் எல்லாவற்றையும் விட பொதுமக்களின் ஆரோக்கியம் மிக முக்கியமானது என்பதால், அதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். என்றும் கூறினார்.