லீக் போட்டிகள்
2020 ஐபிஎல் போட்டிகள் மார்ச் கடைசி வராதில் துவங்கி, மே மூன்றாம் வாரம் வரை நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், லீக் போட்டிகள் துவங்கும் தேதி மற்றும் முடியும் தேதி தெரிய வந்துள்ளது. மேலும், இறுதிப் போட்டி நடைபெறும் தேதியும் தெரிய வந்துள்ளது.
முதல் போட்டி இதுதான்
முதல் லீக் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது.
50 நாட்கள்
லீக் சுற்றின் கடைசிப் போட்டி மே 17 அன்று நடைபெற உள்ளது. லீக் போட்டிகள் மட்டும் 50 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கடைசிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன.
இறுதிப் போட்டி தேதி
பிளே-ஆஃப் சுற்று குறித்த தகவல் வெளியாகவில்லை. எனினும், ஐபிஎல் இறுதிப் போட்டி மே 24 அன்று நடைபெறும் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே சில ஊடகங்களுக்கு ஐபிஎல் அணிகளுக்கு அனுப்பப்பட்ட அட்டவணை மூலமாக கசிந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் குழப்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன் சொந்த மைதான போட்டிகளை ஜெய்ப்பூரில் ஆடுமா அல்லது கவுஹாத்தியில் ஆடுமா? என்பது தெரியவில்லை. அதன் காரணமாகவே, அதிகாரப்பூர்வ ஐபிஎல் லீக் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
போட்டி துவங்கும் நேரம்
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் எட்டு மணிக்கு துவங்க உள்ளது. மூன்று ஞாயிறுகளில் மட்டும் இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அப்போது முதல் போட்டி மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. இரவு போட்டிகள் 7.30 மணிக்கு துவங்கப்பட வேண்டும் என சிலர் கூறிய நிலையில், அதை நிராகரித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
வெளிநாட்டு வீரர்கள் நிலை
இங்கிலாந்து அணி மார்ச் 31 வரை போட்டிகளில் ஆட உள்ளது. அதே போல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் மார்ச் 29 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளன. எனவே, அந்த அணிகளின் வீரர்கள் ஏப்ரல் 1க்கு பின்னரே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்
இந்திய அணி மார்ச் 18 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளது. மார்ச் 18 அன்று கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. அதை அடுத்து 11 நாட்கள் இடைவெளியில் ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ளன.
விதிமுறை என்ன?
உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழுவின் பரிந்துரைப் படி ஐபிஎல் தொடருக்கு முன் நீண்ட இடைவெளி இருக்க வேண்டும். எனினும், 11 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விதிமுறை குறித்த கேள்விகள் எழுந்தால், பிசிசிஐக்கு சிக்கல் ஏற்படும்.
ஆல் ஸ்டார்ஸ் போட்டி
இந்த ஆண்டு ஆல்-ஸ்டார்ஸ் எனப்படும் சிறப்பு போட்டி, ஐபிஎல் தொடருக்கு மூன்று நாட்கள் முன்பு துவங்க உள்ளது. அது குறித்து பிசிசிஐ எந்த தகவலும் அளிக்கவில்லை. அந்தப் போட்டி திட்டமிட்டபடி நடத்தப்பட்டால் மார்ச் 26 அன்று நடத்தப்படும். அதில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.