2021 ஐபிஎல்
2021 ஐபிஎல் தொடர் பற்றி இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. 2020 ஐபிஎல் தொடரின் மாபெரும் வெற்றியால் அடுத்த தொடரை பிரம்மாண்டமாக நடத்த உள்ளது பிசிசிஐ. ஒன்பதாவது அணியை பிசிசிஐ சேர்க்கும் என கூறப்படுகிறது.
மெகா ஏலம்
அத்துடன் மெகா ஏலமும் நடைபெற உள்ளது. அது மட்டும் நடந்தால் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் முக்கிய வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நச்சரிக்கும் அணிகள்
ஆனால், இதை எல்லாம் விட மற்றொரு பெரிய மாற்றத்தை செய்ய வேண்டும் என ஐபிஎல் அணிகள், பிசிசிஐ-யை நச்சரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தொடர்களாகவே ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு வீரர்கள் விஷயத்தில் மாற்றம் செய்யுமாறு கோரி வருகின்றன.
ஐந்து வீரர்கள்
இதுவரை நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஒரு அணியில் தேர்வு செய்து போட்டியில் ஆட வைக்க முடியும். இதை மாற்றி ஒரு போட்டியில் ஐந்து வீரர்களை ஆட வைக்க அனுமதிக்க வேண்டும் என ஐபிஎல் அணிகள் கேட்டு வருகின்றன.
நடக்கவில்லை
ஐபிஎல் அணிகள் கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பும் இதே கோரிக்கையை வைத்தன. ஆனால், அது நடக்கவில்லை. அடுத்த சீசனில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ள நிலையில் அத்துடன் இதையும் மாற்ற வேண்டும் என ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளன.
ஏன் இந்த மாற்றம்?
தற்போது ஒரு அணியில் ஏழு இந்திய வீரர்களும், நான்கு வெளிநாட்டு வீரர்களும் ஆட அனுமதிக்கப்படுகிறது. இதில் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களை மட்டுமே ஆட வைக்க முடியாத சிக்கல் உள்ளது. ஏழு இந்திய வீரர்களில் இரண்டு அல்லது மூன்று பேராவது உள்ளூர் வீரர்கள் அல்லது வயதான இந்திய வீரர்களை ஆட வைக்க வேண்டிய நிலை உள்ளது.
அணித் தேர்வு சிக்கல்
அதனால், தங்கள் தோல்விகளுக்கு உள்ளூர் வீரர்களை வைத்து சரியான அணியை தேர்வு செய்ய முடியாததே காரணம் என கருதும் அணிகள் இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளன. இதில் மற்றொரு நோக்கமும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
விளம்பரம்
அதிக வெளிநாட்டு வீரர்கள் கிடைத்தால் விளம்பர ரீதியாகவும் நிறைய வருமானம் பார்க்கலாம். அதனாலேயே ஐபிஎல் அணிகள் அதிக வெளிநாட்டு வீரர்களை ஆட வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரி இருப்பதாக கூறப்படுகிறது.
பெரிய மாற்றம்
2021 ஐபிஎல் தொடரில் இந்த மாற்றத்தை பிசிசிஐ செய்தால் அது ஐபிஎல் தொடரில் செய்யப்பட்ட பெரிய மாற்றமாக இருக்கும். இதுவரை 13 சீசனில் இருந்த நடைமுறையை மாற்றுவதாக அது இருக்கும். ஆனால், இந்த மாற்றம் இந்திய ரசிகர்களுக்கு எதிரானதாகவும் அமையலாம் என்ற சந்தேகமும் உள்ளது.