2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்கி இருக்க வேண்டும். ஆனால், அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. இந்தியாவிலும் அந்த பாதிப்பு வரத் துவங்கியது. மார்ச் 13 அன்று ஐபிஎல் குறித்து அதிரடி முடிவு எடுத்தது பிசிசிஐ.
விசா கிடைக்கவில்லை
ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைத்தது. வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கிடைக்காத காரணத்தால் இப்படி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதே சமயம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
சிக்கல்
இனி வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கொடுத்தாலும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பலரும் வர அஞ்சுவார்கள். அப்படியே வந்தாலும், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டியை நடத்தினாலும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இந்த தொடரை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது பிசிசிஐ.
இளம் வீரர்கள் நிலை
அதனால், 2020 ஐபிஎல் தொடரை அடுத்த சில மாதங்களுக்கு நடத்த வாய்ப்பே இல்லை. அதே சமயம், ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து பல வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் வாழ்க்கையை ஐபிஎல் மாற்றும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.
வாட்ஸ்ஆப் குரூப் துவக்கம்
அவர்கள் தொடர்ந்து ஐபிஎல் குறித்து கேள்வி கேட்டு வருவதாலும், பிற வீரர்கள் குழப்பத்தில் இருப்பதாலும் ஐபிஎல் அணிகள் வாட்ஸ்ஆப் குரூப் துவங்கி உள்ளன. அதன் மூலம், ஐபிஎல் அணிகள் - பிசிசிஐ முடிவுகள் என்ன, அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி வீரர்களுக்கு தகவல் கூறி வருகின்றனவாம் அந்த அணிகள்.
நல்ல செய்தி வருமா?
அதனால், தான் இளம் வீரர்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் ஐபிஎல் நடக்கும் என்ற நல்ல செய்தி வராதா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த நல்ல செய்தி வர வாய்ப்பில்லை.