2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய விதிமுறை கையேட்டை அளித்துள்ளது.
நேரடித் தொடர்பு கூடாது
அதன்படி ஐபிஎல் அணிகள் தங்களின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் குடும்பத்தினரையும் உடன் அழைத்து வரலாம். ஆனால், அவர்களையும் பாதுகாப்பு சுழலுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளது. வீரர்களுடன் அவர்கள் குடும்பத்தினரையும் வெளி உலகுடன் நேரடித் தொடர்பு கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குடும்பம் வேண்டாம்
பிசிசிஐ குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதி அளித்தாலும் அனைத்து ஐபிஎல் அணிகளிலும் பெரும்பாலான வீரர்கள், பயிற்சியாளர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கருதி தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்து வர விரும்பவில்லை என தெரிவித்து உள்ளனர்.
அணிகளின் திட்டம்
பிசிசிஐ எத்தனை நபர்களை ஒவ்வொரு அணியும் அழைத்து வரலாம் என வரைமுறை அளிக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து அணிகளும் தங்களுடன் 6 முதல் 10 உள்ளூர் அணிகளின் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்ல உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்கள்
வழக்கமாக ஐபிஎல் அணிகள் தாங்கள் போட்டிகளில் ஆடும் போது உள்ளூர் பந்துவீச்சாளர்களையே வலைப்பயிற்சியில் பயன்படுத்துவர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு சுழலுக்குள் இருக்க வேண்டும் என்பதால் வெளி நபர்களை பயிற்சியில் அனுமதிக்க முடியாது.
இந்திய உள்ளூர் பந்துவீச்சாளர்கள்
இந்த சிக்கலை தீர்க்க அனைத்து அணிகளும் தங்கள் குழுவுடன் இந்தியாவில் இருந்தே உள்ளூர் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பத்து பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அழைத்துச் செல்ல உள்ளன.
வீரர்கள் தேர்வு
டெல்லி கேபிடல்ஸ் அணி ஆறு வீரர்களை அழைத்துச் செல்ல உள்ளது. இந்த மூன்று அணிகளும் ரஞ்சி ட்ராபி, அண்டர் 19, அண்டர் 23 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்ற பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய உள்ளன. பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்கள் அகாடமியில் உள்ள பந்துவீச்சாளர்களை அழைத்து வர உள்ளன.
அரிய வாய்ப்பு
ஐபிஎல் அணிகளின் இந்த முடிவால் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் ஆட முடியாத நிலையில் தவித்து வந்த இளம் வீரர்களில் 50 பேருக்கு சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கும். இந்த மோசமான காலகட்டத்தில் ஐபிஎல் மூலம் அவர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதிக சுழற் பந்துவீச்சாளர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிட்ச்கள் மந்தமானவை என்பதால் அதிக வலைப் பயிற்சியில் பந்துவீச அனைத்து அணிகளும் சுழற் பந்துவீச்சாளர்களை அதிக அளவில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே அதிக அளவு சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.