பரிசுப் பணம் குறைப்பு
2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. அதற்கு முன் திடீரென பரிசுப் பணத்தை குறைத்து விட்டதாக ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்தது. தங்களிடம் கேட்காமல் எப்படி இந்த முடிவை எடுக்கலாம் என ஐபிஎல் அணிகள் அப்போதே குரல் எழுப்பின.
சுமூகமான தொடர்பு இல்லை
அந்த சமயத்திலேயே பிசிசிஐ - ஐபிஎல் நிர்வாகக் குழு - ஐபிஎல் அணிகள் இடையே சுமூகமான தொடர்பு இல்லை என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. தற்போது இவர்கள் இடையே ஆன விரிசல் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
முன்னெச்சரிக்கை விதிமுறைகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் வீரர்கள், ஊழியர்களை காக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பிசிசிஐ அதற்கென நீண்ட நெடிய முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து ஐபிஎல் அணிகளிடம் அளித்துள்ளது.
விவோ விலகல்
இதற்கிடையே சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை நிலவி வருவதால் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சரான விவோ நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் ஸ்பான்சராக இருக்க முடியாது என விலகி விட்டது. குறைந்த காலத்தில் பிசிசிஐ அடுத்த ஸ்பான்சரை பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
டிக்கெட் வருமானம் இல்லை
இது அனைத்திலும் ஐபிஎல் அணிகளுக்கு பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஐபிஎல் தொடரில் முன்னெச்சரிக்கை கருதி ரசிகர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அதனால், ஐபிஎல் அணிகளுக்கு வழக்கமாக கிடைக்கக் கூடிய மைதான டிக்கெட் வருமானம் இந்த ஆண்டு கிடைக்காது.
நஷ்ட ஈடு
இவை அனைத்தையும் வலியுறுத்தி ஐபிஎல் அணிகள் பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கி உள்ளன. நேரடி டிக்கெட் வருவாய் இழப்பிற்கு நஷ்ட ஈடு, விவோ நிறுவனம் விலகியதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விளம்பர வருவாய் இழப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டுள்ளன அணிகள்.
கால தாமதம்
மேலும், பிசிசிஐ அடுத்த ஸ்பான்சரை பிடிக்க நேரடியாக களத்தில் குதிக்காமல் விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை சுட்டிக் காட்டி இந்த நடைமுறைகளால் கால தாமதம் ஏற்படும் என விமர்சித்து உள்ளன ஐபிஎல் அணிகள்.
விதிகளை தளர்த்துமாறு கோரிக்கை
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை விதிகளால் வீரர்கள் முன்கூட்டியே பயிற்சி செய்வதற்கும், வெளிநாட்டு வீரர்கள் விரைவில் அணியுடன் இணையவும் தாமதம் ஏற்படும் என கருதும் ஐபிஎல் அணிகள் அந்த விதிகளை தளர்த்துமாறு கோரி உள்ளன.
அதிகாரப் போட்டி
இதற்கிடையே, பிசிசிஐ - ஐபிஎல் நிர்வாகக் குழு இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகவும், அதன் காரணமாக ஐபிஎல் அணிகளை கண்டு கொள்ளாமல் அவர்களே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவதாகவும் ஒரு ஐபிஎல் அணியின் அதிகாரி குற்றம் சுமத்தி உள்ளார். ஆக மொத்தத்தில் 2020 ஐபிஎல் அலங்கோலம் ஆகி வருகிறது.