டாஸ்
நேற்று இதில் டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது .தொடக்கத்தில் இருந்து பெங்களூர் இந்த போட்டியில் அதிரடியாக ஆடியது. தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ் என்று மூன்று வீரர்கள் பெங்களூர் அணியில் அரை சதம் அடித்தனர். இதனால் பெங்களூர் 20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தது.
மும்பை பேட்டிங்
மும்பையில் பேட்டிங் இறங்கிய ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என்று வரிசையாக எல்லோரும் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மும்பையின் இஷான் கிஷான் - பொல்லார்ட் இணை பெங்களூர் வீரர்களின் பந்துகளை கடைசி ஐந்து ஓவரில் அடித்து துவைத்தது. 58 பந்துகள் பிடித்த இஷான் கிஷான் 9 சிக்ஸ் அடித்தார். 2 பவுண்டரி அடித்தார். மொத்தம் 99 ரன்கள் எடுத்து கடைசியில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
போட்டி எப்படி
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் மும்பை அணியை வெற்றிபெற வைப்பார் என்றுதான் கருதப்பட்டது. அதிலும் கடைசி ஓவரில் பெங்களூர் பவுலர் உடானா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் அடித்து இஷான் கிஷான் நம்பிக்கை அளித்தார். அந்த ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5வது பந்து வரை இஷான் கிஷான் அதிரடி காட்டினார்.
ஆனால் அவுட்
ஆனால் அந்த ஓவரின் 5வது பந்தில் இஷான் கிஷான் சிக்ஸ் அடிக்க முயன்று , அது கேட்சாக மாறியது. டீப் மிட் விக்கெட் திசையில் சென்று அங்கு இருந்த தேவ்தத் படிக்கல்லிடம் பந்து தஞ்சம் புகுந்தது. தான் விக்கெட் என்று தெரிந்ததும் மைதானத்திலேயே இஷான் கிஷான் கோபமாக கத்தினார். விக்கெட் விழுந்துவிட்டதே.. அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லையே கோபத்தில் கத்தினார்.
ஆர்வம் எப்படி
அதன்பின் சூப்பர் ஓவர் வந்த போதும் பேட்டிங் இறங்க வேண்டும் என்று இஷான் கிஷான் ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர் களைப்பாக இருந்த காரணத்தால் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய ரோஹித் சர்மா அவரை அனுமதிக்கவில்லை. மாறாக ஹிட்டர்கள் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோரை ரோஹித் சர்மா களமிறங்கினார்.
கோபம்
முதலில் இஷான் கிஷான் ரோஹித்தின் முடிவை எதிர்க்கவில்லை. ஆனால் களத்தில் பொல்லார்ட், பாண்டியா சொதப்புவதை பார்த்து இஷான் கிஷான் கோபம் அடைந்தார். கஷ்டப்பட்டு ரன் அடித்தேன், இப்படி சூப்பர் ஓவரில் சொதப்பி விட்டார்களே என்று கோபம் அடைந்தார். ஹெல்மெட்டை தூக்கி எறிந்து கோபத்தை காட்டினார்.. பின் கண்ணீர்விட்டபடி தலையில் கையை வைத்துக் கொண்டே கீழே உட்கார்ந்து விட்டார்.
கீழே உட்கார்ந்தார்
நான் கஷ்டப்பட்டது எல்லாம் வீணாய் போய்விட்டதே என்று விரக்தியின் உச்சத்திற்கே இஷான் கிஷான் சென்றார். அதன்பின் ரோஹித் சர்மா போட்டியின் முடிவில் இஷான் கிஷானிடம் சென்று அவரை கட்டிபிடித்து சமாதானம் செய்தார். இந்த போட்டியில் இஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய ரோஹித் அனுப்பாதது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.