சிஎஸ்கே வெற்றி
ஐபிஎல் தொடர் நேற்றைய தினம் துவங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோற்கடித்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவதாக நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் துபாயில் மோதவுள்ளன.
இஷாந்த் சர்மாவிற்கு காயம்
இதையொட்டி நேற்றைய தினம் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய பௌலர் இஷாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்து இன்றைய ஆட்டத்தில் அவர் இடம்பெறுவது குறித்து உறுதி செய்வார்கள் என்று டெல்லி கேபிடல்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய போட்டியில் பங்கேற்பாரா?
இஷாந்த் சர்மாவிற்கு காயங்கள் ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரி மாதத்தில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு மறுபடி கணுக்காலில் அடிபட்டது. இந்நிலையில் தற்போதைய சீசனில் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ள நிலையில் தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய பௌலர் இஷாந்த் சர்மா
டெல்லி கேபிடல்ஸ் அணியில் பௌலிங்கை பலப்படுத்தும்வகையில் ரஹானே, ரவிசந்திரன் அஸ்வின், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் முக்கியமானவராக இஷாந்த் சர்மா உள்ளார். இதுவரை ஐபிஎல்லில் கோப்பையை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கியுள்ளது.