ஆர்சிபி -மும்பை இந்தியன்ஸ் மோதல்
ஐபிஎல்லின் 48வது லீக் போட்டியில் இன்றைய தினம் ஆர்சிபியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். இதுவரை 88 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 100 விக்கெட்டுகள் சாதனையை எட்ட ஒரேயொரு விக்கெட்டே மீதமுள்ளது.
16வது வீரர் பும்ரா
இந்நிலையில், இன்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த 100 விக்கெட் கிளப்பில் இணையும் 16வது வீரர் என்ற பெருமையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிளப்பில் 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் லசித் மலிங்கா.
17 விக்கெட்டுகள்
இந்த சீசனில் லசிங்கா விளையாடாத நிலையில், பும்ரா சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையை இந்த சீசனில் பெற்றுள்ளார். முதலிடத்தில் டெல்லி வீரர் காகிசோ ரபாடா உள்ளது குறிப்பிடத்தக்கது.
கீரன் பொல்லார்ட் பாராட்டு
இந்நிலையில் பும்ரா உலக தரத்திலான பௌலர் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் கீரன் பொல்லார்ட் பாராட்டு தெரிவித்துள்ளார். சில வடிவங்களில் நம்பர் ஒன் வீரராக பும்ரா உள்ளார் என்றும் பொல்லார்ட் கூறியுள்ளார். பிளே -ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இன்றைய ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.