பயணம் குறித்து பிசிசிஐ
ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு யூஏஇயில் வரும் 19ம் தேதி துவங்கி 53 நாட்கள் நடைபெறவுள்ளது. இதையடுத்து முன்னதாக குவாரன்டைன் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்வகையில் 20ம் தேதி வாக்கில் தங்களது பயணத்தை ஐபிஎல்அணிகள் மேற்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
முகமது ஷமி புகைப்படம் வெளியீடு
இந்நிலையில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் அணியாக தங்களது பயணத்தை துவக்கியுள்ளர். அந்த அணியின் நட்சத்திர பௌலர் முகமது ஷமி தன்னுடைய சக வீரர்களுடன் தான் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீரர்கள் அனைவரும் முகக்கவசங்களுடன் அந்த புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.
யூஏஇ ரெடி!
இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று தங்களது பயணத்தை துவங்கவுள்ளனர். இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் யூஏஇ ரெடி என்று கேப்ஷனுடன் அணி வீரர்கள் தயாராகும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. வீரர்கள் அனைவரும் ஐந்து மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்துடன் அந்த புகைப்படத்தில் போஸ் கொடுக்கின்றனர்.
சிஎஸ்கே சிஇஓ அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய யூஏஇ பயணத்தை நாளை துவங்கவுள்ளதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். யூஏஇயில் 53 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த முறை மதியம் மற்றும் மாலையில் நடைபெறவுள்ள போட்டிகள் அரை மணிநேரம் முன்னதாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.