ஐபிஎல் சிக்கல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடைபெற்று வருகிறது. அதனால் வீரர்கள் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளனர். குடும்பத்தில் யாரேனும் இறந்தால் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
எளிதல்ல
அங்கே இருந்து இந்தியா சென்றால் மீண்டும் அணிக்கு திரும்புவது அத்தனை எளிதல்ல. கொரோனா வைரஸ் பாதிப்பு தவிர்க்க பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருப்பதால் மீண்டும் அணியில் இணைவது கடினம். அந்த வகையில் தான் நிதிஷ் ராணாவும் சிக்கினார்.
என்ன நடந்தது?
அவரது மாமனார் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் மரணம் அடைந்தார். நிதிஷ் ராணா இந்தியா சென்று திரும்புவது கடினமான காரியம். மேலும், கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக அவர் இருக்கிறார். இந்த நிலையில் அவர் டெல்லி போட்டியில் பங்கேற்றார்.
துவக்க வீரராக ஆடினார்
எப்போதும் மூன்றாம் அல்லது நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யும் அவர் இந்தப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கினார். கொல்கத்தா அணி முதலில் விக்கெட்களை இழந்த போதும் ராணா நங்கூரம் போட்டு நின்று அதிரடியாக ஆடினார்.
என்ன செய்தார்?
சுனில் நரைனுடன் சேர்ந்து 100 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்து ரன் குவித்தார் ராணா. அவர் அரைசதம் அடித்த போது தன் மாமனார் பெயர் பொறித்த ஜெர்சியை ஆட்டிக் காட்டினார். தன் அரைசதத்தை அவருக்கு அர்ப்பணிப்பதாக அவர் இப்படி செய்தார்.
பாராட்டு
அவர் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்த போதும் மனம் தளராமல் ஆடி அரைசதம் அடித்ததை சக கொல்கத்தா அணி வீரர்கள் பாராட்டினர். ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் அவரது மனைவி எழுந்து நின்று கைதட்டி ராணாவை பாராட்டினர்.
டெல்லி தோல்வி
இந்தப் போட்டியில் நிதிஷ் ராணா 53 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் குவித்தது. டெல்லி அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.