கொல்கத்தா பேட்டிங்
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின் மார்கன் 40, ஷுப்மன் கில் 57 ரன்கள் சேர்த்து அணியை கரை சேர்க்க போராடினர்.
சுமாரான ஆட்டம்
கடைசி நேரத்தில் பெர்குசன் அதிரடி ஆட்டம் ஆடி 24 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட 10 ரன்களை தொடவில்லை. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து இருந்தது.
விக்கெட் வேட்டை
பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் விக்கெட் வேட்டை நடத்தியது. ஷமி 3, ஜோர்டான் 2, பிஸ்னோய் 2, முருகன் அஸ்வின் 1, மேக்ஸ்வெல் 1 விக்கெட் வீழ்த்தினர். பிஸ்னோய் ஒரு மெய்டன் ஓவர் உட்பட 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தலாக பந்து வீசி இருந்தார்.
சேஸிங்
அடுத்து 150 ரன்களை சேஸிங் செய்யத் துவங்கியது பஞ்சாப் அணி. மந்தமான ஆடுகளம் என்பதால் ராகுல் - மந்தீப் சிங் நிதான ஆட்டம் ஆடினார்கள். ராகுல் 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து கிறிஸ் கெயில் களத்துக்கு வந்தார்.
கிறிஸ் கெயில் அதிரடி
அவர் ஆடத் துவங்கிய போது ஓவருக்கு 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது அவர் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்கத் துவங்கினார். மந்தீப் சிங்கும் அதிரடிக்கு மாறினார். கெயில் 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.
மந்தீப் சிங் அரைசதம்
மந்தீப் சிங் 56 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இளம் வீரரான அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. கெயில் வெற்றிக்கு அருகே வந்த உடன் ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பஞ்சாப் வெற்றி
பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தை பெற்றது, நெட் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணியை முந்தியது.