தினேஷ் கார்த்திக் பதவி விலகல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் பாதியில் பதவி விலகினார். அவருக்கு பதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் வந்த பின்னும் கொல்கத்தா அணி வெற்றி, தோல்விகளை மாற்றி, மாற்றியே சந்தித்து வருகிறது.
கொல்கத்தா - பெங்களூர் போட்டி
இந்த நிலையில். கொல்கத்தா - பெங்களூர் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி மோசமாக விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஊதித் தள்ளிய பெங்களூர்
அடுத்து ஆடிய பெங்களூர் அணி 13.3 ஓவரில் இந்த சிறிய இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் பெங்களூர் வெற்றி பெற முக்கிய காரணம், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான்.
சிராஜ் பந்துவீச்சு
முகமது சிராஜ் தான் வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்கள் வீழ்த்தி மிரள வைத்தார். அவர் 4 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இரண்டு மெய்டன் ஓவர்கள் வேறு வீசி இருந்தார்.
டாம் பான்டன் பேட்டிங் வரிசை
கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனும் சில தவறுகளை செய்தார். அதில் முதல் தவறு இதுதான். இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டாம் பான்டன்-ஐ நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தார் மார்கன். அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பெர்குசன் ஓவர்
அடுத்து வெறும் 84 ரன்கள் என்ற ஸ்கோரை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில், கடந்த போட்டியில் தீப்பொறியாக சீறிப் பாய்ந்த பெர்குசனை பவர்பிளே ஓவர்களில் மார்கன் பயன்படுத்தவில்லை. அவர் ஒருவேளை முதல் சில வீரர்களில் விக்கெட் வீழ்த்தி இருந்தால் போட்டி மாறி இருக்கக் கூடும்.
குல்தீப் யாதவ் ஸ்பின்னர் இல்லையா?
அடுத்து வருண் சக்கரவர்த்திக்கு 4 ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு கொடுத்த கேப்டன் இயான் மார்கன் சர்வதேச அனுபவம் கொண்ட சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. குல்தீப் யாதவ் நல்ல ஸ்பின்னர் இல்லையா? என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தினேஷ் கார்த்திக்கே பரவாயில்லை
இயான் மார்கன் தொடர்ந்து தவறுகள் செய்துள்ள நிலையில், இதற்கு முன்பு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக்கே பரவாயில்லை என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசத் துவங்கி உள்ளனர். மார்கன் அடுத்த போட்டியிலாவது வெற்றி பெற்றுக் கொடுப்பாரா?