கொல்கத்தா அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த அணியால் கடந்த ஆண்டு பிளே-ஆஃப் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு கட்டாயம் பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என போராடி வருகிறது.
சுனில் நரைன்
அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக பந்துவீச்சாளரான சுனில் நரைன் துவக்க வீரராக ஆடி வருகிறார். அவரது விக்கெட் அதிக முக்கியம் இல்லை என்பதால் அவரது அதிரடி ஆட்டத்தால் கிடைக்கும் ரன்கள் கொல்கத்தா அணிக்கு போனஸாக இருந்தது.
மிரண்ட எதிரணிகள்
சுனில் நரைன் விக்கெட்டை வீழ்த்தா விட்டால் பெரும் சிக்கல் என எதிரணிகள் மிரண்ட காலம் இருந்தது. ஆனால், கடந்த சீசனிலேயே நரைன் விக்கெட்டுக்கு எதிரணிகள் திட்டம் போட்டு செயல்படத் துவங்கினர். இந்த ஆண்டு முற்றிலுமாக அவர் பலவீனங்களை குறி வைக்கத் துவங்கி உள்ளனர்.
டக் அவுட்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆன சுனில் நரைன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார். அவர் விக்கெட்டால் கொல்கத்தா அணிக்கு பெரிய இழப்பு இல்லை என்றாலும் சரியான துவக்கம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது.
பலவீனம்
சுனில் நரைன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கொல்கத்தா அணியால் எதிரணிகளை மிரள வைக்க பயன்படுத்தப்பட்டார். அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் அடித்து ஆடும் போது எதிரணிகள் கதி கலங்கின. ஆனால், அவரது பலவீனம் தற்போது வெளியாகி விட்டதால் அவரால் இனி பலனில்லை.
சிக்கலில் தினேஷ் கார்த்திக்
சுனில் நரைனை மாற்றி வேறு நல்ல துவக்க வீரரை இறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கேப்டன் தினேஷ் கார்த்திக். அது அத்தனை சுலபமான காரியம் இல்லை. நரைன் பேட்டிங்கில் டாப் ஆர்டரில் இருப்பதால் அதிக பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
அணியை மாற்ற முடியுமா?
நரைனை பந்துவீச்சாளராக மட்டுமே பயன்படுத்தினால் ஏற்கனவே அணியில் இருக்கும் பந்துவீச்சாளர் ஒருவரை வெளியேற்ற வேண்டும். ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க வேண்டும். இப்படி மொத்த அணியின் சம நிலையும் மாறி விடும். அதனால், சரியான முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.