பஞ்சாப் பேட்டிங்
2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து தனக்கு தானே குழி பறித்தது.
தனி ஆளாக நின்ற ராகுல்
பஞ்சாப் அணியில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் கடைசி வரை தனி ஆளாக நின்று ரன் குவித்தார். மூன்று விக்கெட்கள் வீழ்ந்தாலும், அவர் திட்டமிட்டு விக்கெட் போகாமல் ஆடி ரன் குவித்து வந்தார்.
அதிரடி ஆட்டம்
சதம் அடிக்கும் வரை வெறும் ஃபோர் அடித்து வந்த ராகுல், சதம் அடித்த பின் கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸர்களையும் பறக்க விட்டார். 62 பந்துகளில் சதம் கடந்த அவர் 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். இதில் 14 ஃபோர், 7 சிக்ஸ் அடங்கும்.
கடைசி இரண்டு ஓவர்
கடைசி இரண்டு ஓவர்களில் அவரது அதிரடியால் பஞ்சாப் அணி 26 மற்றும் 23 ரன்கள் குவித்தது. இரண்டு ஓவரில் மட்டும் 49 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. அதில் ராகுல் மட்டுமே 132 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இமாலய சாதனை
ராகுல் 132 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் இமாலய சாதனை ஒன்றை செய்தார். ராகுல் எடுத்த 132 ரன்களே ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் ஆகும். இது பெரும் சாதனை ஆகும்.
கேப்டன்களில் அதிகம்
மேலும், ஐபிஎல் கேப்டன்களில் அதிக ரன்கள் எடுத்தும் சாதனை செய்துள்ளார். முன்னதாக அதிவேகமாக ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தி முதல் இடத்தை பிடித்தார் ராகுல்.
பெங்களூர் பரிதாபம்
பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்த நிலையில் பெங்களூர் அணி பதற்றத்தில் வேகமாக விக்கெட்களை இழந்து தவித்தது. 4 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த அந்த அணி, 57 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரும் அணியை கைவிட்டனர்.