பெங்களூர்
பெங்களூர் அணியின் பேட்டிங், பவுலிங் எல்லாம் இந்த முறை முன்னேற்றம் அடைந்துள்ளது. எப்போதும் பெங்களூர் அணியின் ஓப்பனிங் சொதப்பும். ஆனால் இந்த முறை அணிக்குள் படிக்கல், ஆரோன் பின்ச் எடுக்கப்பட்டு அணியின் ஓப்பனிங் புதிய வலிமை பெற்றுள்ளது. அதேபோல் மிடில் ஆர்டரிலும் கோலி, டி வில்லியர்ஸ் இருப்பதால் பெங்களூர் அணி வலிமையாக உள்ளது .
பவுலிங்
எல்லா சீசனிலும் பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் என்று பார்த்தால்.. அது அணியின் மோசமான பவுலிங் ஆர்டர்தான். ஆனால் இந்த முறை பெங்களூர் அணி மிகவும் சிறப்பான பவுலிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. சைனி, சாஹல், வாஷிங்க்டன் சுந்தர், உடானா, மொயின் அலி, சிராஜ் என்று மிக சிறப்பான பவுலிங் ஆர்டரை பெங்களூர் அணி கொண்டு இருக்கிறது.
சிறப்பான பவுலிங்
பெங்களூர் அணி இந்த முறை கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளது. பெங்களூரு அணியின் இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணம் அணியின் கோச் மாற்றப்பட்டதுதான். அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கட்ச் நியமிக்கப்பட்டார். அணியின் தலைமை நிர்வாகியாக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டார்.
மாற்றம்
இவர்கள் இருவரும் அணிக்குள் வந்ததுதான் பெங்களூர் அணியின் அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவர்கள்தான் மொத்தமாக பெங்களூர் அணிக்கு புதிய முகம் கொடுத்து வீரர்களை தயார் செய்தனர். இதற்காக கோலி மிகப்பெரிய தியாகம் செய்தார் என்றுதான் கூற வேண்டும். இதற்காக, கோலி பெங்களூர் அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டனையே நீக்க பரிந்துரை செய்தார்.
பரிந்துரை
ஆம் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். இவர்தான் பெங்களூர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் இவரையே அணியில் இருந்து நீக்கிவிட்டு, கோலி தனக்கு நெருக்கமான சைமன் கட்சை பயிற்சியாளராக நியமித்தார். விளைவு தற்போது பெங்களூர் அணி வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது.
உலகக் கோப்பை
உலகக் கோப்பையை வென்றவர் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் கோலி துணிச்சலாக முடிவு எடுத்தார்.கோலியின் இந்த முடிவு பெங்களூர் அணியை மாற்றியுள்ளது. கோலிதான் புதிய கோச்சிற்கான பரிந்துரையை செய்தது.
கோச்
ஆனால் தோனி இதே போல முடிவை எடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு சரியாக பயிற்சி அளிக்காத பிளமிங்கை மாற்றும் துணிவு தோனிக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. பிளமிங்தான் இந்த சீசனில் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது. அவரை நீக்க தோனி பரிந்துரை செய்வாரா என்று கேள்வியெழுந்துள்ளது.