குல்தீப் யாதவ்
இந்திய அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக 2018இல் வலம் வந்தார் குல்தீப் யாதவ். டி20 யில் நம்பர் 1 சுழற் பந்துவீச்சாளராகவும் அறியப்பட்டார். ஆனால், எல்லாமே, 2019இல் தலைகீழாக மாறியது. அவரது பார்ம் அவுட் ஆனது.
2019 ஐபிஎல் சோகம்
2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பங்கேற்ற குல்தீப் யாதவ், சில போட்டிகளில் ரன்களை வாரி இறைத்து வந்தார். ஒரு கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை என்றால் வாய்ப்பு கிடைக்காது என எச்சரிக்கப்பட்டார். அப்போதும் அவர் ரன்களை வாரி இறைத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மீளவே இல்லை
அப்போது தன்னம்பிக்கை இழந்து காணப்பட்ட குல்தீப் யாதவ், அதன் பின் இந்திய அணியில் இணைந்து ஆடிய போதும் தன் இயல்பான ஆட்டத்தை இழந்திருந்தார். 2019 உலகக்கோப்பை தொடரிலும், அதன் பின்னும் அவர் சரியாக பந்து வீசவில்லை.
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடரில் தன் பார்மை அவர் மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எங்கே தன் பார்மை இழந்தாரோ, அதே ஐபிஎல் தொடரில் அதை மீட்டு எடுப்பார் என ரசிகர்கள் நம்பினர். இந்த தொடரில் அவருக்கு மூன்று போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வாய்ப்பு இல்லை
அதில் முதல் போட்டியில் 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்தாலும், அடுத்த போட்டிகளில் 2 ஓவர்களில் 15, 3 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவரை நம்பி நான்கு ஓவர்கள் கொடுக்க மறுத்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். அத்துடன் மூன்று போட்டிகளுக்கு பின் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இளம் சுழற் பந்துவீச்சாளர்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வருகிறது. சுனில் நரைனுடன் இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் கம்லேஷ் நாகர்கோட்டி அணியில் ஆடி வருகின்றனர்.
ஏன் வாய்ப்பு இல்லை?
இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் சிற்ப்பாக பந்து வீசி வரும் நிலையில், குல்தீப் யாதவ்வுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவரது பந்துவீச்சு, போட்டிகள் நடக்கும் மைதானத்தில் அவரது முந்தைய செயல்பாடு உள்ளிட்டவற்றை வைத்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஒரீரு போட்டிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிட்டத்தட்ட தன் அணியை கண்டறிந்து விட்டது. இனி குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் வேறு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அது நடக்கும். இந்த சீசனும் குல்தீப் யாதவ்வின் தன்னம்பிக்கையை பதம் பார்த்து வருகிறது.