சிஎஸ்கே குழப்பம்
சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது முதல் அந்த அணியின் பிரச்சனைகள் ஆரம்பமானது. அந்த அணியால் சரியான 11 வீரர்களை தேர்வு செய்ய முடியவில்லை. அதனால், தோல்விகளும் ஏற்பட்டது.
தோல்விகள்
இந்த சீசனில் முதல் போட்டியில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து கடும் ஏமாற்றம் அளித்தது. அதிலும் இரண்டு போட்டிகளிலும் ஒரே மாதிரியாக சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது.
மூன்று வீரர்கள்
அப்போது தோனி அணியில் அம்பதி ராயுடு, டிவைன் பிராவோ, ஷர்துல் தாக்குர் என மூன்று வீரர்களை அணியில் சேர்த்தார். அதன் பின் ஆடிய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வி அடைந்து ஏமாற்றியது.
பலவீனங்கள்
மூன்று தொடர் தோல்விகளால் சிஎஸ்கே அணி துவண்டது. எனினும், தோனி அணியை மாற்றவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அதே அணியுடன் களமிறங்கினார். பேட்டிங்கில் முன்னேற்றம் இருந்தாலும், பந்துவீச்சில் சில பலவீனங்கள் வெளிப்படையாக தெரிந்தது.
பந்துவீச்சில் சொதப்பல்
மத்திய ஓவர்களில் சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, பியுஷ் சாவ்லா தொடர்ந்து ரன்களை வாரி இறைத்து வருகின்றனர். அது எதிரணிகளை அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது. அழுத்தம் கொடுக்காமல் போனால் விக்கெட் வீழ்ச்சியும் நின்று போகிறது.
இரண்டு அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள்
கடந்த சீசன்களில் இந்த பணியை சிறப்பாக செய்து வந்தவர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர். அவர்கள் ரன்களை கட்டுப்படுத்தி, எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் கில்லாடிகள். முதல் ஓவர் முதல் கடைசி ஓவர் வரை வீசும் திறன் கொண்ட கில்லாடிகள். அவர்கள் இல்லாத நிலையில் தான் சிஎஸ்கே மத்திய ஓவர்களில் ரன்களை கொடுத்து வருகிறது.
ஹர்பஜன் சிங் நிலை
அவர்கள் இருவரில் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவரை கேப்டன் தோனி சமாதானம் செய்து ஆட வைத்து இருக்கலாம். ஆனாலும், ஹர்பஜன் சிங் தாமாகவே விலகியதால் தோனியால் இதில் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை.
இம்ரான் தாஹிர் எங்கே?
ஆனால், ஐபிஎல் தொடரில் ஆர்வமாக இருக்கும் இம்ரான் தாஹிர் இன்னும் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு இல்லாமல் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல்லுக்கு முன் பங்கேற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நல்ல பார்மில் இருந்தார். அவரை தேர்வு செய்யாதது தான் தோனி செய்த தவறு.
தோனி ஏன் தேர்வு செய்யவில்லை?
சிஎஸ்கே அணியில் எந்த நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருக்கிறது. வாட்சன், பாப் டுபிளெசிஸ் நிச்சயம் பேட்டிங்கில் தேவை. ஆல் - ரவுண்டர் பற்றாக்குறையை போக்க அனுபவ வீரர் பிராவோ வேண்டும். சாம் கர்ரன் சிறப்பாக ஆடி வருகிறார்.
இதை செய்ய வேண்டும்
இப்படி யாரையும் நீக்க முடியாமல், இம்ரான் தாஹிரை அணியில் சேர்க்க முடியாமல் தவித்து வருகிறார் தோனி. அடுத்து வரும் போட்டிகளில் பிராவோ அல்லது சாம் கர்ரனுக்கு பதில் இம்ரான் தாஹிர் அணியில் இடம் பெற்றால் சிஎஸ்கே பந்துவீச்சில் வலுப்பெறும்.