சேஸிங்
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அடுத்த மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்தது. அந்த மூன்று போட்டிகளிலும் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்து இருந்தது.
அணியில் சமநிலை
அணியில் சமநிலை இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, கடந்த போட்டியிலேயே கேப்டன் தோனி சிஎஸ்கே அணியை மாற்றினார். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சரி சமமான அணியை தேர்வு செய்தார். அப்படியும் சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வி அடைந்தது.
அதே அணி
இந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதே அணியுடன் மீண்டும் களமிறங்கியது சிஎஸ்கே அணி. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சிஎஸ்கே அணி, 200 ரன்களை நோக்கி ஆடி வந்த பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தினர். அந்த அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது.
எதிர்பார்ப்பு
179 ரன்கள் சேஸிங்கில் சிஎஸ்கே அணி என்ன செய்யப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் எந்த தவறும் செய்யாமல் முதல் ஓவரில் இருந்தே பவுண்டரி அடித்து ஆடினார்கள்.
ஆட்டம் மாறி இருந்தது
கடந்த மூன்று போட்டிகளில் ஷேன் வாட்சன் முதல் சில ஓவர்களில் பவுண்டரி அடிக்காமல் தடுப்பாட்டம் ஆடி வந்தார். அதனால், அடுத்து வந்த பேட்டிங் ஆட வந்த வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் அவர் ஆட்டம் மாறி இருந்தது.
அணுகுமுறை
கேப்டன் தோனி சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்களின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். அப்போது தான் மொத்த அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடும் என தோனி கடந்த போட்டியின் தோல்விக்கு பின் கூறி இருக்கிறார்.
வாட்சன் செய்த மாற்றம்
ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் வீணாக்கிய பந்துகள் தான் சிஎஸ்கே அணியை கடந்த போட்டிகளில் தோற்க வைத்தது. அந்த அணுகுமுறையை மாற்றிய வாட்சன் முதல் ஓவரில் இருந்தே அடித்து ஆடினார். அதன் காரணமாகவே சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது.
அதிரடி ஆட்டம்
இந்தப் போட்டியில் ஷேன் வாட்சன் 11 ஃபோர், 3 சிக்ஸ் விளாசி 53 பந்துகளில் 83 ரன்கள் குவித்து இருந்தார். பாப் டுபிளெசிஸ் 53 பந்துகளில் 87 ரன்கள் குவித்து இருந்தார். இவர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பஞ்சாப் அணி.
அடுத்த போட்டிகளில் வெற்றி
இது சிஎஸ்கே அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும், சிஎஸ்கே அணியின் அணுகுமுறை மாற்றம் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்க உதவும்.