பஞ்சாப் - மும்பை போட்டி
2020 ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இந்தப் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. அங்கே பேட்டிங் செய்ய சாதகமான சூழல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தோல்விகள்
பஞ்சாப், மும்பை இரு அணிகளும் தங்களின் கடைசிப் போட்டியில் சில சொதப்பல்கள் செய்து தோல்வி அடைந்தன. இந்த நிலையில் இரு அணிகளும் இந்தப் போட்டியில் வென்று தோல்வியில் இருந்து மீள முடிவு செய்தன.
பஞ்சாப் திட்டம்
பஞ்சாப் அணி சுழற் பந்துவீச்சை ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தது. கடந்த போட்டியில் அந்த அணியில் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் இடம் பெற்றனர். கிளென் மேக்ஸ்வெல் சில ஓவர்களை வீசினார்.
கீரான் பொல்லார்டு
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் கீரான் பொல்லார்டு இருப்பதால் லெக் ஸ்பின்னர்களை அவர் எளிதாக அடித்து ஆடுவார். ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் இருவருமே லெக் ஸ்பின்னர்கள் என்பதால் ஒரு ஆஃப் ஸ்பின்னர் அணியில் இருப்பது நல்லது என்ற முடிவை எடுத்தது பஞ்சாப்.
கிருஷ்ணப்பா கௌதம்
அதன் காரணமாக ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமை அணியில் சேர்த்தார் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல். அவர் ஆல் - ரவுண்டராக பேட்டிங்கிலும் அணிக்கு உதவுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருக்கு பதில் யாரை நீக்குவது?
முருகன் அஸ்வின் நீக்கம்
இந்த இடத்தில் தான் முருகன் அஸ்வினை நீக்கி உள்ளார் ராகுல். ரவி பிஷ்னோய் நல்ல பார்மில் இருக்கிறார். எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார். எனவே அவரை வைத்துக் கொண்டு அஸ்வினை நீக்கி இருக்கிறது பஞ்சாப்.
கருண் அல்லது சர்ப்ராஸ்
ரசிகர்கள் இந்த முடிவை எதிர்த்து உள்ளனர். சரியாக பேட்டிங் செய்யாமல் சொதப்பி வரும் கருண் நாயர் அல்லது சர்ப்ராஸ் கானை கூட நீக்கி இருக்கலாம். முருகன் அஸ்வினை நீக்கியது தவறு என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.