ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வந்த அவர், பஞ்சாப் போட்டிக்கு முன் 4998 ரன்கள் எடுத்து இருந்தார்.
முதலில் பேட்டிங்
இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆடியது மும்பை இந்தியன்ஸ். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா, டி காக் துவக்கம் அளித்தனர்.
5000 ரன்கள்
ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார். அதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது வீரர் ரோஹித் சர்மா ஆவார்.
முதல் இரண்டு இடம்
5000 ஐபிஎல் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வீரர்கள் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா. கோலி 172 இன்னிங்க்ஸ்களில் 5430 ரன்கள் குவித்துள்ளார். ரெய்னா 189 இன்னிங்க்ஸ்களில் 5368 ரன்கள் குவித்துள்ளார்.
அடுத்த இரண்டு இடங்கள்
ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் நான்காவது இடத்தில் டேவிட் வார்னர் 4793 ரன்களுடன் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் ஷிகர் தவான் 4648 ரன்களுடன் இடம் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் 5000 ரன்கள் மைல்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.
ரெய்னாவை முந்துவாரா?
ரோஹித் சர்மா 5000 ரன்களை கடந்துள்ள நிலையில், இந்த சீசனில் மேலும் 368 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் சுரேஷ் ரெய்னாவை முந்தி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார். ரெய்னா இந்த தொடரில் இருந்து விலகி இருப்பதால் ரோஹித் எளிதாக அந்த சாதனையை செய்ய முடியும்.
மும்பை பேட்டிங்
மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் துவக்கத்தில் தடுமாறியது. டி காக் டக் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரோஹித் சர்மா - இஷான் கிஷன் பொறுப்பாக ஆடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.