2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற போட்டி போடும் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி பகுதியை எட்டி உள்ளது ஐபிஎல். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
சிஎஸ்கே அவுட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. எனினும், அந்த அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த பின் மற்ற அணிகளை வீழ்த்தி வருவதால் லீக் சுற்றின் இறுதிப் பகுதி சுவாரசியமாக மாறி உள்ளது.
கொல்கத்தா தோல்வி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான தன் இரண்டாவது மோதலில் சிஎஸ்கே தோல்வி அடைந்திருந்தால் ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் தங்கள் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கும். ஆனால், அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி, சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் தோல்வி
அதே போல, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இருந்தால் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியின் பிளே-ஆஃப் கனவு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
சிஎஸ்கே, ராஜஸ்தான் செய்த காரியம்
சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளின் வெற்றியால் பிளே-ஆஃப் சுற்றில் 12 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி, பெங்களூர் அணிகள் கூட பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அந்த இரு அணிகளும் லீக் சுற்றில் மோத உள்ளதால் அதில் ஒரு அணி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
ஒரு இடம்
பெங்களூர், டெல்லி அணிகள் அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளதால் எப்படியும் பிளே-ஆஃப் செல்லும் என கருதப்படுகிறது. ஆக, மீதமுள்ள அந்த ஒரு இடத்துக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத் என நான்கு அணிகள் மோதி வருகின்றன. இந்த நான்கு அணிகளில் ஒரு அணி மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.