என்ன நடந்தது?
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எப்படியும் பஞ்சாப் அணி வெற்றி பெறாது என அனைவரும் எண்ணினர். ஆனால், அந்த அணி அசத்தலாக பந்துவீசி ஹைதராபாத் அணியை கடைசி ஓவர் வரை ஆட வைத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மந்தமான பிட்ச்
இந்தப் போட்டி நடந்த துபாய் ஆடுகளம் மந்தமாக இருந்தது. அதை உணர்ந்த பஞ்சாப் அணி 160 ரன்கள் எடுக்க முயற்சி செய்தது. அனைத்து வீரர்களும் நிதான ஆட்டம் ஆடினர். அதிரடி வீரர் பூரன் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிக ரன்கள்.
பஞ்சாப் ஸ்கோர்
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோர் எளிதானது என்பதால் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெறும் என பலரும் கணித்தனர். ஆனால், பஞ்சாப் அணி ஆடுகளத்தை சரியாக புரிந்து கொண்டு பந்துவீச்சில் தங்களுக்கான நேரத்துக்காக காத்திருந்தது.
ஹைதராபாத் ஆட்டம்
ஹைதராபாத் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தது. வார்னர் - பேர்ஸ்டோ பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோ 19, வார்னர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மனிஷ் பாண்டே 15, அப்துல் சமத் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர்.
4 ரன்களுக்கு 6 விக்கெட்
அடுத்து விஜய் ஷங்கர் அணியை காப்பாற்ற போராடினார். வெற்றி இலக்குக்கு அருகே நெருங்கிய உடன் அவர் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். 110 முதல் 114 எடுப்பதற்குள் ஹைதராபாத் அணி 6 விக்கெட்களை இழந்து ஆல் - அவுட் ஆனது.
வெற்றி
பஞ்சாப் அணி யாருமே எதிர்பாராத வகையில் கடைசி 3 ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் ஜோர்டான் 3, அர்ஷ்தீப் 3 விக்கெட் வீழ்த்தினர். இவர்கள் தான் கடைசி 3 ஓவர்களில் வரிசையாக விக்கெட் வீழ்த்தினர்.