ஐபிஎல் நிலை
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுன் காரணமாக கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசித்து வந்தது.
டி20 உலகக்கோப்பை
2020 டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே அந்த தொடரை நடத்துவது கடினம் என்பதால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா முன்பே அந்த தொடரை நடத்த தங்களால் முடியாது என கூறி இருந்தது.
தள்ளி வைப்பு
அதே போல, ஐசிசி அமைப்பும் தாமதமாக டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைப்பதாக அறிவித்தது. அதற்காகவே காத்திருந்த பிசிசிஐ உடனடியாக அந்த கால இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளதாக அறிவித்தது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ.
பாகிஸ்தான் வீரர்கள் விமர்சனம்
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் பிசிசிஐ அமைப்பு தன் அதிகாரத்தை பயன்படுத்தி டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்து விட்டதாகவும், ஐபிஎல் தொடரை நடத்தவே இவ்வாறு செய்து இருப்பதாகவும் குற்றம் சுமத்தினர்.
நடந்தது என்ன?
ஆனால், உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் அனைத்து அணிகளையும் ஒன்றிணைத்து அத்தனை பெரிய உலகக்கோப்பை தொடரை நடத்துவது கடினம். மேலும், ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிக்கவும் முடியாது. விளம்பரங்கள் பெறுவதும் கடினம்.
மதன் லால் விளாசல்
இது போன்ற பல காரணங்களால் தான் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் பிசிசிஐ மீது குற்றம் சுமத்தி இருப்பதை கடுமையாக சாடி இருக்கிறார் முன்னாள் இந்திய அணி வீரர் மதன் லால்.
யோசிக்காமல் பேசுவார்கள்
இது பற்றி மதன் லால் கூறுகையில், "பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள். பேசுவதற்கு முன் யோசிக்கவே மாட்டார்கள். எப்படி அவர்கள் இந்தியாதான் உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தது? என சொல்ல முடியும்" என தாக்கிப் பேசினார்.
நல்ல முடிவு
"முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வருகிறது. டி20 உலகக்கோப்பை என்பது முற்றிலும் வேறு மாதிரியான தொடர். ரசிகர்கள் இல்லாதது, விளம்பர சிக்கல் போன்றவற்றை கருத்தில் எடுத்துக் கொண்டு தான் ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அந்த தொடரை தள்ளி வைத்துள்ளார்கள். அது நல்ல முடிவு" என்றார் மதன் லால்.
ஐபிஎல் முடிவு
"ஐபிஎல் எப்படியும் நடக்கத்தான் போகிறது. நாம் ஏற்கனவே செப்டம்பர் - அக்டோபரில் இருக்கும் தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசித்துத் தான் வந்தோம். எனவே, நாம் ஐபிஎல் தொடரை அதை வைத்து தான் நடத்துகிறோம். அதுவும் நல்ல விஷயம் தான்" என்றார் மதன் லால்.
பாகிஸ்தான் வீரர்கள் என்ன செய்கிறார்கள்?
ஆசிய கோப்பை தொடரை நடத்தி இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் பேச்சு பொறாமையில் வெளிவருகிறது. அவர்கள் கிரிக்கெட் மூலம் நம் உறவை வளர்க்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், ஒரீரு வீரர்கள் ஏதாவது கூறி மொத்த விஷயத்தையும் மோசமாக மாற்றி விடுகிறார்கள்" எனவும் பாகிஸ்தான் வீரர்களை விளாசினார் மதன் லால்.