பழி தீர்த்தது மும்பை
அந்த தோல்விக்கு பழி தீர்த்தது மும்பை அணி. அதை விட சுவாரசியமானது இது தான். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு கோலி தான் காரணம் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பரபரப்பு
இந்த நிலையில், பெங்களூர் அணியை ரோஹித் சர்மா காயத்தால் ஆடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் சேஸிங்கில் கடைசி வரை நின்று வீழ்த்தியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கோலியை பழி தீர்த்து விட்டார் என கூறி வருகின்றனர்.
போட்டியில் என்ன நடந்தது?
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தாங்கள் முதலில் பேட்டிங் ஆடவே விரும்பினோம் என்ற விராட் கோலியின் பெங்களூர் அணி முதலில் அசத்தலாக பேட்டிங் ஆடத் துவங்கியது.
சொதப்பலாக ஆடினர்
ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் அதிரடியாக ரன் குவித்தனர். பிலிப் 33 ரன்கள் சேர்த்தார். படிக்கல் 45 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து அசத்தினார். எனினும், மற்ற வீரர்கள் சொதப்பலாக ஆடினர். விராட் கோலி 9, டிவில்லியர்ஸ் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
8 ரன்கள் 4 விக்கெட்கள்
இடையே 8 ரன்கள் இடைவெளியில் 4 விக்கெட்களை இழந்தது பெங்களூர் அணி. கடைசி ஓவர்களில் குர்கீரத் 14, வாஷிங்க்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
மும்பை பேட்டிங்
அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது மும்பை இந்தியன்ஸ். டி காக் 18, இஷான் கிஷன் 25 ரன்கள் குவித்தனர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதலில் நிதானமாக ரன் சேர்த்தார். சௌரப் திவாரி 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ்
க்ருனால் பாண்டியா 10, ஹர்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் சரிந்த போதும் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தில் இறங்கி அணியை வெற்றி பெற வைக்க முழுமூச்சில் போராடினார்.
வெற்றி
கடைசி வரை நின்ற அவர் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். 19.1 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை கடந்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.