கார்த்திக் தியாகி
கார்த்திக் தியாகி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் ஆவார். 19 வயது தான் ஆகிறது. கடந்த ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்று இருந்தார். 6 போட்டிகளில் 11 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
அப்போதே கவனம் ஈர்த்த அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கி இருந்தது. 140 கிலோமீட்டர் வேகத்தில் பயிற்சியில் அவர் பந்து வீசுவதை பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது.
முதல் போட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த இரு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கார்த்திக் தியாகிக்கு அணியில் வாய்ப்பு அளித்தது. அவர் இந்தப் போட்டியில் பந்து வீசும் வாய்ப்பை பெற்றார்.
பந்துவீச்சு எப்படி?
இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார் கார்த்திக் தியாகி. அவர் ஓடி வந்த ஸ்டைல், வேகம், பந்துவீச்சு உத்திகள் உடனடியாக ரசிகர்களை கவர்ந்தது. அப்போதே ரசிகர்கள் இவர் எதிர்கால இந்திய வீரர் என கூறத் துவங்கினர்.
1 விக்கெட்
அவர் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், அது தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் க்வின்டன் டி காக் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. டி காக் தியாகியின் பந்தை அடித்து ஆட முற்பட்டார். பந்து அவரது தலைக்கு மேலே சென்றது. பட்லர் கேட்ச் பிடித்தார்.
பென்ஸ்டோக்ஸ் என்ன சொன்னார்?
கார்த்திக் தியாகியின் பந்துவீச்சை கண்ட சக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், அவர் ஓடி வருவது பிரெட் லீ போல இருப்பதாகவும், அவரது டெலிவரி இஷாந்த் சர்மாவைப் போல இருப்பதாகவும் சரியாக குறிப்பிட்டார்.
ஆமோதித்த பிரெட் லீ
இதை பிரெட் லீயே ஒப்புக் கொண்டார். ஆமாம், அவர் பந்துவீச்சு என்னைப் போல தான் இருக்கிறது. அதை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என பென் ஸ்டோக்ஸ்-க்கு பதில் அளித்தார் பிரெட் லீ. 19 வயது இளம் இந்திய வீரரைப் பற்றி அவரது அறிமுகப் போட்டியிலேயே இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பேசிக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எதிர்காலம்
கார்த்திக் தியாகி தன் முதல் ஐபிஎல் போட்டியிலேயே எதிர்கால இந்திய வீரர் என புகழப்பட்டு வருகிறார். அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்றாலும் இயல்பாகவே ரசிகர்களை ஈர்த்துள்ளார் இந்த இளம் வீரர். இந்த ஐபிஎல் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தினால் இந்திய அணி வாய்ப்பு கிடைக்கக் கூடும்.