லீக் போட்டி
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 2020 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் மோதின. இந்தப் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. அந்த மைதானத்தின் பவுண்டரி எல்லை சிறியது. எளிதாக சிக்ஸ் அடிக்கலாம் என்பதால் இரு அணிகளும் 200 ரன்களை எட்டும் என கருதப்பட்டது.
அதிரடி பேட்ஸ்மேன்கள்
அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கீரான் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அந்த அணி இன்னும் அதிக ரன்கள் அடிக்க முயற்சிக்கும் என கருதப்பட்டது. ஹைதராபாத் அணி என்ன செய்யப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கடைசி ஓவர்கள் திட்டம்
மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. விக்கெட்கள் இழந்தாலும் தொடர்ந்து ஓவருக்கு 9 முதல் 10 ரன்கள் என்ற ரன் ரேட்டை தொடர்ந்தது. இந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் கடந்த போட்டியை போல மும்பை 100 ரன்கள் வரை குவிக்கும் என கருதப்பட்டது.
ரஷித் கான்
16வது ஓவரில் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆட தயாராக இருந்தனர். அந்த ஓவரை வீச ரஷித் கான் வந்தார். அப்போதே தங்கள் அதிரடி முடிவை கைவிட்டது மும்பை ஜோடி. முதல் இரண்டு பந்துகளில் பாண்டியா ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
பொல்லார்டு என்ன செய்தார்?
மூன்றாவது பந்தில் அவர் 1 ரன் எடுக்க, அடுத்து பொல்லார்டு பேட்டிங் செய்ய வந்தார். ரஷித் கான் அடுத்த மூன்று பந்துகளில் ஒரு வைடும் வீசினார். அந்த நான்கு பந்துகளிலும் பொல்லார்டு ரன் அடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஏன் இப்படி?
அதிரடி மன்னன் பொல்லார்டு கடந்த காலங்களில் ரஷித் கான் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை இழந்துள்ளார். அதன் காரணமாக தற்போது அவர் உஷாராக இருக்கிறார். சுழற் பந்துவீச்சாளர்களில் ரஷித் கான் ஓவர்களில் மட்டுமே அவர் ரன் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.
மும்பை ஆட்டம்
ரஷித் கான் வீசிய 16வது ஓவரில் மும்பை 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் ஒரு ரன் வைடு மூலம் கிடைத்தது. அடுத்த 4 ஓவர்களில் மும்பை அணி 59 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை 208 ரன்கள் சேர்த்தது.