2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29 முதல் நடைபெற இருந்தது. மே 24 வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருந்தது.
அடுத்து ஆசிய கோப்பை தொடர்
இந்த வருடம் டி20 உலகக்கோப்பை தொடர் இருப்பதால் ஆசிய கோப்பை தொடர் டி20 தொடராக நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. அதன் பின் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் துவங்கும். அந்த தொடர் நவம்பர் மாதத்தில் முடிவடையும்.
கொரோனா வைரஸ் பரவல்
இந்த திட்டப்படி அனைத்து அணிகளும் தயாராகி வந்தன. இதன் இடையே கொரோனா வைரஸ் உலகில் பரவியது. அதனால், விளையாட்டுத் தொடர்கள் அனைத்தும் முடங்கி உள்ளன. ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது.
சந்தேகம்
ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை தொடர்கள் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொருளாதாரம் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டு சில நாடுகளில் நீண்ட நாட்களுக்கு இயல்பு நிலையை அடைய முடியாத அளவுக்கு சென்று கொண்டு இருக்கிறது.
அப்படி நடந்தால்..
இப்படிப்பட்ட சூழலில் கொரோனா வைரஸ் அடுத்த ஒரீரு மாதங்களில் உலகம் முழுவதும் கட்டுப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. அப்படி நடந்தால் எந்த கிரிக்கெட் தொடரை எப்போது தேதி மாற்றி நடத்துவது என்ற குழப்பம் உள்ளது.
மைக்கேல் வாஹன் கருத்து
அதற்கு விடை கொடுத்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன். அவர் கூறுகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் ஐந்து வாரங்கள் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என கூறி உள்ளார்.
என்ன சொன்னார் வாஹன்?
"இதோ ஒரு எண்ணம். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐந்து வாரம் ஐபிஎல் தொடர் நடத்தலாம். அனைத்து வீரர்களும் அதை உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியாக எடுத்துக் கொள்வார்கள்" என கூறி உள்ளார்.
இரண்டும் முக்கியம்
அது மட்டுமின்றி, "கிரிக்கெட் விளையாட்டுக்கு ஐபிஎல் மிகவும் முக்கியம். அதே போல, உலகக்கோப்பை தொடரும் முக்கியம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடர் நடக்காவிட்டால் கிரிக்கெட் விளையாட்டின் மீதான ரசிகர்கள் ஈர்ப்பு ஒரு படி கீழே இறங்கும் என்பதையே அவர் இப்படி கூறி இருக்கிறார்.
இந்த திட்டம் சாத்தியமா?
மைக்கேல் வாஹன் கூறியபடி ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்றால் செப்டம்பர் மாதத்தில் தான் நடத்த வேண்டும். அப்போது ஆசிய கோப்பை நடைபெறாமல் போனால் மட்டுமே இந்த திட்டம் சாத்தியமாகும். மேலும், அதே மாதத்தில் தான் இங்கிலாந்து - இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற உள்ளது.
பிசிசிஐ முடிவு என்ன?
பிசிசிஐ இதுவரை ஐபிஎல் நடத்துவது எந்த முடிவும் எடுக்கவில்லை. பலரும் நாடு இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறி வருகின்றனர். ஏப்ரல் 15 அன்று தான் பிசிசிஐ அடுத்த முடிவை எடுக்க உள்ளது.