2020 ஐபிஎல் வெற்றி
2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கு நடுவே நடைபெற்றது. கொரோனா வைரஸ், சீன ஸ்பான்சர் விலகல், நஷ்டத்தால் ஒரு ஸ்பான்சர் விலகல் என தொடர்ந்து சிக்கல்களை சந்தித்தாலும் அதை சமாளித்து தொடரை நடத்தியது பிசிசிஐ. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது.
எகிறிய டிஆர்பி
எந்த ஐபிஎல் சீசனுக்கும் கிடைக்காத டிஆர்பி ரேட்டிங் 2020 ஐபிஎல் சீசனுக்கு கிடைத்தது. முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அதிக விறுவிறுப்பாக தொடர் நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டிலும் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது.
நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்
இந்த மாபெரும் வெற்றியால் அடுத்த சீசனுக்கு இப்போதே திட்டமிடத் துவங்கியது பிசிசிஐ. குறிப்பாக 2020 ஐபிஎல் தொடரில் விளம்பர வருவாய் மூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடிவு செய்தது. அதற்காக அதிரடி திட்டத்தை கையில் எடுத்தது.
கங்குலி போட்ட திட்டம்
பிசிசிஐ தலைவர் கங்குலி சில அதிரடி திட்டங்களை முன் வைத்துள்ளார். அது இன்னும் பிசிசிஐயில் ஒப்புதல் பெறவில்லை. அந்த திட்டதின்படி அடுத்த சீசனில் எட்டு ஐபிஎல் அணிகளுடன் கூடுதலாக ஒன்பதாவது ஐபிஎல் அணியை அறிமுகம் செய்து கூடுதல் வருமானத்தை ஈட்ட உள்ளது பிசிசிஐ,
அஹமதாபாத் அணி
ஏற்கனவே எட்டு முக்கிய நகரங்களின் பெயர்களில் ஐபிஎல் அணிகள் இருக்கும் நிலையில், ஒன்பதாவது அணி அஹமதாபாத் நகரத்தை மையமாக வைத்து செயல்படும் என கூறப்படுகிறது. அஹமதாபாத் அல்லது குஜராத் பெயரில் அந்த அணி செயல்படக் கூடும்.
வெளியான ரகசியம்
இந்த நிலையில் தான் ஒரு தென்னிந்திய நடிகர் அந்த ஒன்பதாவது ஐபிஎல் அணியை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது. ஒன்பதாவது ஐபிஎல் அணி பற்றிய செய்தியே நேற்றுதான் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே அந்த நடிகர் அந்த அணியை வாங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
யார் அந்த நடிகர்?
இந்த தகவல் வெளியாக முக்கிய காரணம் அந்த நடிகர் துபாயில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியை சிறப்பு விருந்தினராக நேரில் கண்டு களித்தது தான் என்கிறார்கள். அந்த நடிகர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால். அவர் தான் மும்பை - டெல்லி மோதிய இறுதிப் போட்டியை நேரில் கண்டார்.
சாத்தியமா?
அவர் பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஐபிஎல் அணியை வாங்க உள்ளதாகவும், அதற்காகவே அவர் துபாய் சென்று பிசிசிஐ அதிகாரிகளை சந்தித்ததாகவும் பத்திரிக்கையாளர் ரஜ்னீஷ் என்பவர் கூறி உள்ளார். இப்படி ஐபிஎல் அணியை நேரில் பேசி வாங்குவது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விண்ணப்பம்
முதலில் புதிய ஐபிஎல் அணிக்கான அறிவிப்பை வெளியிட்டு, அதை வாங்க விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பம் கோரப்படும். அதிக விலை கொடுக்க முன் வருபவர்களுக்கு அந்த அணி அளிக்கப்படும். எனினும், புதிய அணி குறித்து நேரடியாக அறிய அவர் துபாய் சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மெகா ஏலம்
2021 ஐபிஎல் தொடரில் புதிய அணி அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் மெகா ஏலம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கங்குலி மனது வைத்தால் இதை நடத்திக் காட்டுவார் என்கிறார்கள். அதே சமயம், கொரோனா வைரஸ் காரணமாக சந்தை நிலையற்று இருக்கும் நிலையில் புதிய அணியை அறிமுகம் செய்வது ஆபத்தானது என்றும் சிலர் கூறுகிறார்கள்.