ஐபிஎல்லில் தோனி
கடந்த ஒரு ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விளையாடாமல் விலகியுள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் துவங்கவுள்ள நிலையில், யூஏஇயில் நடைபெறவுள்ள அந்த போட்டிகளில் தோனி பங்கேற்று சிஎஸ்கே அணியை தலைமையேற்று வழிநடத்தவுள்ளார்.
தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி
கடந்த ஒரு ஆண்டு காலமாக தோனியின் ஆட்டத்தை காணாமல் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ள அவரது ரசிகர்கள் ஐபிஎல் குறித்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடுவார் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
நிரப்பப்படாத தோனியின் இடம்
விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெற்றாலும் கேம் பினிஷர் என்ற நிலையில் தோனியின் இடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் போட்டிகளில் தோனி சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தோனி மீண்டு வரவேண்டும்
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கிடைத்துள்ள ஓய்விலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் என்றும் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டில் தோனி ஒரு சூப்பர்ஸ்டார் என்றும் சிறப்பான வீரர்களை அவர்களது போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.