தோனியின் ஆட்டத்தை காண ஆவல்
சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த மாதத்தில் ஓய்வு பெற்றுள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். அவரது ஆட்டத்தை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களது ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் முதல் நாளிலேயே சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
தோனி குறித்து அனில் கும்ப்ளே உறுதி
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தோனி ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய 100 சதவிகித திறமையை வெளிப்படுத்துவார் என்று முன்னாள் இந்திய அணியின் வீரரும் தற்போதைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தலைமை கோச்சாக செயல்பட வேண்டும்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎல் தொடரில் அதிகமான இந்திய வீரர்கள் தலைமை பயிற்சியாளராக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது ஒரேயொரு ஐபிஎல் அணியில், அதாவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மட்டும் இந்திய வீரரான கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இந்திய தொடரில் ஒரேயொரு இந்திய வீரர் தலைமை பயிற்சியாளராக உள்ளது முரண் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கிறிஸ் கெயில் அணி வீரர்களை இந்த சீசனில் சிறப்பாக வழிநடத்துவார் என்றும் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை ஐபிஎல்லில் கோப்பையை கைப்பற்றாத நிலையில், தற்போது வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல முக்கிய வீரர்களை அணியில் களமிறக்கியுள்ளது.