கொரோனா பீதி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் படு வேகமாக பரவி வருகிறது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், அங்கே இருந்து சீனா முழுவதும் பரவி, பின் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது.
120 நாடுகள்
இதுவரை 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த கொடிய வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் மிகச் சில நாட்களில் 70க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. மேலும், பரவலாம் என்ற அச்சம் உள்ளது. இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அவசர கால நடவடிக்கையில் இறங்கி உள்ளன.
விளையாட்டுத் தொடர்கள்
இந்த கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட துறை விளையாட்டு தான். காரணம், விளையாட்டுப் போட்டிகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்துக்கு வருவார்கள். அவர்களில் ஒருவருக்கு இந்த வைரஸ் இருந்தாலும், மற்ற பல்லாயிரம் பேருக்கும் ஒரே நேரத்தில் இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் நிலை
இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவில் பல லட்சம் மக்களை மைதானத்துக்கு அழைத்து வரும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரசு கட்டுப்பாடு
மத்திய அரசு சமீபத்தில் மக்கள் பொது வெளியில் அதிகமாக கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளது. இது ஐபிஎல் போன்ற விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.
கர்நாடகா நிலைப்பாடு
பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்த மாநில அரசு தங்களால் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க முடியாது என வெளிப்படையாக கூறி உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஆடும் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு அதிரடி
மகாராஷ்டிராவில் இது வரை பத்து பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அந்த மாநில அரசு அதிரடி முன்னெச்சரிக்கையில் இறங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
டிக்கெட் விற்க தடை
ஐபிஎல் தொடரின் பரம எதிரி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதும், தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற இருந்த நிலையில், அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
கலக்கத்தில் ஐபிஎல் அணிகள்
இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் கடும் கலக்கத்தில் உள்ளன. ரசிகர்கள் நேரில் வராத பட்சத்தில் போட்டிகள் மூடப்பட்ட மைதானத்தில் தான் நடத்தப்படும். அப்படி நடந்தால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.
ஐபிஎல் நடக்குமா?
அதனால், தொடரை தள்ளி வைப்பதா? அல்லது மூடப்பட்ட மைதானத்தில் நடத்துவதா? என்ற குழப்பம் பிசிசிஐக்கு உள்ளது. அரசின் உதவி, அனுமதி இல்லாமல் ஐபிஎல் தொடர் நடக்காது என்பதால் ஐபிஎல் அணிகளும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளன.