கட்டுப்பாடு
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே 2020 ஐபிஎல் தொடர் நடைபெற்றது. அதனால் பிசிசிஐ பல கட்டுப்பாடுகளை விதித்து ஐபிஎல் அணிகளை கட்டுப்படுத்தியது. ஒவ்வொரு அணிக்கும் தனி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.
பாதுகாப்பு வளையத்தில் அணிகள்
ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் என எல்லோரையும் ஒரே பாதுகாப்பு வளையத்தில் வைத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதை மனதில் வைத்து ஐபிஎல் அணிகள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டன.
இவ்வளவு பேரா?
ஐபிஎல் அணிகள் பெரும்பாலும் 40க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்தன. சில அணிகள் 60, 70 வரை கூட போனது. ஆனால், ஒரு அணி மட்டும் 150 பேரை அழைத்துச் வந்ததாம். அதைக் கண்டு பிசிசிஐ அதிகாரிகள் முதலில் மிரண்டு போயுள்ளனர்.
எந்த அணி அது?
அந்த அணி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தான். அந்த அணி தங்கள் வீரர்களுடன் அவர்களின் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட சில அணிகளில் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
உதவியாளர்கள் பட்டியல்
மும்பை இந்தியன்ஸ் அணியில் குடும்பம் என்பதை தாண்டி உதவியாளர்கள் பட்டியலும் பெரிதாக நீண்டுள்ளது. அதில் டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் என சிலரது பெயர்கள் இருந்ததை பார்த்து பிசிசிஐ அதிகாரிகள் மிரண்டு போயுள்ளனர்.
அபுதாபியில் மும்பை
எனினும், ஐபிஎல் அணிகள் எத்தனை பேரை அழைத்து வரலாம் என பிசிசிஐ கூறவில்லை. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணியை எதுவும் சொல்ல முடியவில்லை. ஆறு ஐபிஎல் அணிகள் துபாயில் தங்கிய நிலையில், மும்பை, கொல்கத்தா அணிகள் மட்டும் அபுதாபியில் தங்கின. ராஜஸ்தான் அணி ஷார்ஜாவில் தங்கியது.
இதுதான் காரணம்
இது பற்றியும் ஒரு தகவல் வலம் வருகிறது. நிறைய பேர் இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக அணிகள் இருக்கும் துபாயை விடுத்து, அபுதாபியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். அதிக பேர் இருந்தாலும் மும்பை அணி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மற்ற அணிகளை விட முன்னணியில் இருந்தது.
பாதுகாப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறிய அளவிலான குழுவாக இருந்தும் 13 பேருக்கு அதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி 150 பேருக்கும் மேல் அழைத்துச் சென்று பாதுகாப்பாக தொடரை சந்தித்தது. அந்த வகையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டது.
சாம்பியன்
2020 ஐபிஎல் தொடரின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது மும்பை வீரர்கள் மறக்காமல் சொன்ன ஒரு விஷயம் தங்கள் அணி தங்களை நன்றாக பார்த்துக் கொண்டது. வசதிகள் செய்து கொடுத்தது என்றார்கள்.