மந்தமான மைதானங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்த மூன்று நகரங்களில் ஐபிஎல் தொடர் நடக்க உள்ள மைதானங்கள் மந்தமானவை. வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காது.
சுழற் பந்துவீச்சாளர்கள்
சுழற் பந்துவீச்சாளர்கள் தான் இந்த மந்தமான ஆடுகளங்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது என்றவுடன் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள சுழற் பந்துவீச்சாளர்களை கணக்கெடுத்து விட்டன.
மும்பை இந்தியன்ஸ் பலவீனம்
அதில் மும்பை இந்தியன்ஸ் தான் பலவீனமாக உள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் - க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர் மற்றும் ஜெயந்த் யாதவ். இவர்களில் க்ருனால் பாண்டியா மட்டுமே அதிக சர்வதேச அனுபவம் கொண்ட சுழற் பந்துவீச்சாளர்.
முதிர்ச்சி இல்லை
ஆனால், க்ருனால் பாண்டியா இந்திய அணிக்கு கடைசியாக பந்து வீசிய தொடர்களில் அதிக ரன்களை வாரிக் கொடுத்ததாக விமர்சனம் உள்ளது. ராகுல் சாஹர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனாலும், இன்னும் முதிர்ச்சி அடைந்த பந்துவீச்சாளராக மாறவில்லை.
ராகுல் சாஹர் ஆறுதல்
கடந்த ஐபிஎல் சீசனில் க்ருனால் பாண்டியாவை விட சிறப்பாக செயல்பட்டார் ராகுல் சாஹர். அது மட்டுமே ஒரு நல்ல விஷயம். ஜெயந்த் யாதவ் ஐபிஎல் போட்டிகளில் கூட அதிக அனுபவம் இல்லாதவர். இவர்களை வைத்துக் கொண்டு இந்த சீசன் முழுவதும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ்.
நல்ல வேகப் பந்துவீச்சாளர்கள்
அந்த அணியில் ஆறு நல்ல வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பும்ரா, ட்ரென்ட் போல்ட், பாட்டின்சன் போன்ற உலகத்தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தும் துபாய், அபுதாபி ஆடுகளங்களில் அவர்களால் பெரிய பயனில்லை என்றே கூறுகிறார்கள் விமர்சகர்கள்.
மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்
முதல் சில போட்டிகளில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்கள் அதன் பின் சேதம் அடைந்து சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். அது போன்ற நேரங்களில் ஐபிஎல் அணிகள் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம்.
காயம் ஏற்பட்டால்..
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி வேறு வழியின்றி, க்ருனால், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ் என மூவரையும் களமிறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும் அந்த அணிக்கு அணித் தேர்வில் அழுத்தம் ஏற்படும்.
சறுக்கல்
இதன் மூலம், மும்பை அணியின் பந்துவீச்சு திட்டத்தையும் அனைத்து அணிகளும் எளிதாக கணித்து விடும் வாய்ப்பும் கிடைக்கும். அங்கே தான் சறுக்கப் போகிறது மும்பை அணி. முதல் போட்டியில் சிஎஸ்கே அணியுடனே இந்த சறுக்கல் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது.
சிஎஸ்கே திட்டம்
செப்டம்பர் 19 அன்று சிஎஸ்கே அணியை சந்திக்கும், மும்பை இந்தியன்ஸ் அணியில் க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் பந்துவீச்சை சமாளிக்க சிஎஸ்கே நிச்சயம் திட்டமிடும். அது போட்டியில் சிஎஸ்கே அணிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மற்ற அணிகள் குறி
இதே போலவே, மற்ற ஐபிஎல் அணிகளும் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை குறி வைத்து தாக்கப் போகின்றன. இந்த சீசனில் இந்த விஷயம் தான் கடந்த சீசன் சாம்பியன் அணியான மும்பைக்கு பெரும் சவாலாக இருக்கும். அதே சமயம், அந்த அணியிடம் அதிரடி பேட்டிங் வரிசை இருப்பது மற்ற அணிகளை வீழ்த்த உதவும்.