ஐபிஎல் வெற்றி
2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே முதலில் இருந்து சிறப்பாக ஆடி வந்தது. இறுதிப் போட்டி வரை எளிதாக முன்னேறிய அந்த அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
சிறந்த அணி
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. மற்ற அணிகள் அனைத்திலும் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக இருந்தது. அதே போல, குறைந்த அளவில் தான் வீரர்களை பயன்படுத்தியது.
2021 ஐபிஎல் திட்டம்
இந்த நிலையில், சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதகமாக ஒரு தவிர்க்க முடியாத விஷயம் அமைந்தது. பிசிசிஐ 2021 ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த உள்ளது. அதற்கு முன் மெகா ஏலமும் நடத்த உள்ளது பிசிசிஐ.
ஐந்து மாத சாம்பியன்
நவம்பர் மாதம் 2020 ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் மாதமே அந்த பட்டத்தை இழக்கும். அடுத்த சீசனிலும் சாம்பியன் பட்டம் வென்றால் தான் சாம்பியனாக தொடர முடியும். மும்பை அணி ஐந்து மாதம் மட்டுமே சாம்பியனாக இருக்க முடியும்.
மெகா ஏலம்
ஐபிஎல் தொடர் தான் மார்ச் மாதம் துவங்கும். மெகா ஏலம் அதற்கு முன்னதாக டிசம்பரிலேயே நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அனைத்து அணிகளும் மூன்று வீரர்களை தவிர தங்கள் வீரர்களை மொத்தமாக விடுவிக்க வேண்டும்.
ஒன்றரை மாத சாம்பியன்கள்
அப்படி நடந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஒன்றரை மாதம் மட்டுமே சாம்பியனாக இருக்க முடியும். அதன் பின் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டால் மட்டுமே சாம்பியனாக தங்களை அழைத்துக் கொள்ள முடியும்.
மும்பை அணி கலையும்
சாம்பியன் பட்டத்தை விட முக்கியமானது தற்போது ஒன்றாக ஆடிய அதே மும்பை இந்தியன்ஸ் அணியை அப்படியே தக்க வைப்பது தான். மெகா ஏலத்தில் மும்பை அணி வீரர்களை வாங்க மற்ற அணிகள் பெரும் போட்டி போடுவார்கள், அதன் முடிவில் மும்பை அணி அவர்களில் பலரை மீண்டும் அணியில் சேர்க்க முடியாமல் போகலாம்.
கடுப்பில் வீரர்கள்
அந்த விஷயத்தில் தான் சில மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தொழில்முறையில் செயல்படுகிறது. ஐபிஎல் தொடருக்கு பல மாதங்களுக்கு முன்பு இருந்தே வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். வீரர்களுக்கு தேவையான அனைத்தையும் அந்த அணி செய்து கொடுக்கிறது.
பிசிசிஐ முடிவு என்ன?
அப்படி ஒரு சிறந்த நிர்வாகத்தை விட்டு விலகவும் வீரர்களுக்கு விருப்பம் இல்லை, ஆனால், மெகா ஏலத்தை யாராலும் தவிர்க்க முடியாது. பிசிசிஐ இன்னும் மெகா ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. புதிய ஐபிஎல் அணி அறிவிப்புடன் மெகா ஏலம் குறித்த அறிவிப்பும் வெளியாகும்.