முதல் வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் 2020 ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தான் தொடங்கியது. வலுவான அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதிய முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அம்பதி ராயுடு.
அடுத்தடுத்த தோல்விகள்
அடுத்த போட்டிகளில் அம்பதி ராயுடு இடம் பெறாத நிலையில் சிஎஸ்கே அணி தோல்விகளை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிராக சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி.
சேஸிங் சொதப்பல் ஏன்?
சேஸிங்கில் போராடி தோல்வி அடைந்தால் கூட அது வீரர்களின் நம்பிக்கையை குலைக்காது. ஆனால், சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றே நோக்கமே இன்றி ஆடியது போலவே இருந்தது. குறிப்பாக துவக்க வீரர்கள் முரளி விஜய் - ஷேன் வாட்சன் நிதானமாக துவக்கம் அளித்து அடுத்த பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலைஏற்படுத்தி வந்தனர்.
முரளி விஜய் எடுத்த ரன்கள்
வாட்சன் எப்போதுமே நிதானமாக துவங்கி பின் அதிரடி ஆட்டம் ஆடுபவர். ஒரு போட்டியில் அவர் நன்றாகவே ஆடினார். ஆனால், முரளி விஜய் மூன்று போட்டிகளிலும் நிதான ஆட்டம் ஆடியதுடன் ரன் குவிக்கவும் திணறினார். மூன்று போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் 1, 21 மற்றும் 10 ஆகும்.
அதிருப்தி
அவர் முதல் சில ஓவர்களில் பந்தை வீணடிப்பதோடு ரன்னும் எடுக்காமல் ஆட்டமிழப்பதால் சேஸிங்கில் தேவைப்படும் ரன் ரேட் எகிறுகிறது. அந்த அழுத்தத்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி தோல்வி அடைகின்றனர். அதனால் முரளி விஜய் மீது அதிருப்தி நிலவி வந்தது.
நீக்க முடிவு
பயிற்சியாளர் பிளெம்மிங், கேப்டன் தோனி இரண்டு தோல்விகளுக்கு பின் துவக்கம் சரியில்லை என வெளிப்படையாக பேசி வந்தனர். இந்த நிலையில், அடுத்த போட்டியில் முரளி விஜய்யை நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.
அம்பதி ராயுடு
கடைசி இரு போட்டிகளில் காயம் காரணமாக ஆடாத அம்பதி ராயுடு மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார். அவருக்கு வழி விட்டு இந்திய வீரர் ஒருவர் அணியை விட்டு நீக்கப்பட வேண்டும். அதன் காரணமாகவே முரளி விஜய்யை நீக்க கேப்டன் தோனி முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
துவக்க வீரர் யார்?
அம்பதி ராயுடு மூன்றாம் வரிசை அல்லது நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து வந்த நிலையில், அவர் துவக்க வீரராக களமிறங்குவாரா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஷேன் வாட்சனுடன், நல்ல பார்மில் இருக்கும் பாப் டுபிளெசிஸ் துவக்கம் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.
ருதுராஜ் கெயிக்வாட்
இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் இரண்டு போட்டிகளில் ஆடி உள்ளார். அவர் மிடில் ஆர்டரில் ஆடி வருகிறார். அவர் துவக்க வீரராக ஆடவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்பது மட்டும் உறுதி.