அடுத்த மாதம் 19ம் தேதி துவக்கம்
ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 19ம் தேதி யூஏஇயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் யூஏஇ சென்றடைந்து அங்கு ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணையை இன்னும் வெளியிடாமல் பிசிசிஐ காலம் தாழ்த்தி வருகின்றது.
ஐபிஎல் அணிகள் திட்டம்
முதலில் குவாரன்டைன் அடுத்ததாக பயிற்சி முகாம்கள் என்று ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான பயிற்சிகளை அளிக்க அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 5 மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்த வீரர்களை இந்த பயிற்சிகள் மூலம் போட்டிகளுக்கு தயார் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் வெளியாகும்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தோனியின் ஓய்வையொட்டி தனது டிவிட்டர் பதிவில், அவரை வரும் 19ம் தேதி டாஸ் போடும்போது சந்திக்கலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரின் அட்டவணையை இறுதி செய்வதில சிரமம் காணப்படுகிறது. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எளிதில் மாற்றி அமைக்கும்வகையில் அட்டவணையை அமைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இந்த வாரத்தில் இந்த அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாமதமாக ஐபிஎல்லில் பங்கேற்கும் அணி வீரர்கள்
வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடர் நடைபெறவுள்ளநிலையில், அந்த இரு அணிகளை சேர்ந்த ஐபிஎல் வீரர்கள் 18ம் தேதி வாக்கில்தான் யூஏஇ சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டும் ஆரம்ப ஐபிஎல் போட்டிகளை வடிவமைக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு உள்ளது.
கருத்தில் கொள்ளவேண்டிய பிசிசிஐ
மேலும் ஒரு அணியை சேர்ந்த ஒரு வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அவரை தனிமைப்படுத்த வேண்டும் மேலும் உடன் விளையாடிய வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் காணப்படுகிறது. அவ்வாறு ஏற்பட்டால், அந்த அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் காத்திருப்பு
யூஏஇயில் அக்டோபர் மாத துவக்கம் வரையில் அதிக வெயில் காணப்படும். இதையும் கருத்தில் கொண்டு, குறைவான மதிய நேர போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இத்தகைய விஷயங்களில் கவனத்தை செலுத்தி பிசிசிஐ தன்னுடைய அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அட்டவணை வெளியானால் மட்டுமே போட்டி அலுவலர்கள், டிவி ஊழியர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தங்களது பயணத்தை திட்டமிட முடியும்.