அணியில் இணைந்த அஸ்வின்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட இந்திய அணியின் ஆப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். அந்த அணியின் சிறப்பான ஆட்டங்களுக்கு இவர் காரணமாக இருப்பார் என்று அணியின் கோச் உள்ளிட்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மோசமான காலகட்டம்
இந்நிலையில் அணியில் இணைவதற்காக துபாய் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னதாக குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டார். அந்த காலகட்டம் தன்னுடைய வாழ்நாளின் மிகவும் மோசமான காலகட்டம் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அஸ்வின் குறித்த வீடியோவில் இதுகுறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
எவ்வளவு நேரம்தான் பார்ப்பது?
கொரோனா காரணமாக கடந்த 5 -6 மாதங்களாக தான் தனது வீட்டில் இருந்த போதும் தான் இத்தகைய வெறுமையை உணரவில்லை என்றும் குவாரன்டைனின் முதல் நாள் முழுவதும் வெளியில் பார்ப்பதும் துபாய் லேக்கை பார்ப்பதிலுமே தன்னுடைய நேரத்தை செலவிட்டதாகவும் அவர் கூறினார். அடுத்தது புர்ஜ் கலிஃபாவை பார்ப்பதில் நேரம் செலவானது. அழகாக இருந்தாலும் எவ்வளவு நேரம் அதை பார்ப்பது என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
வாசிப்பதில் கவனம் செல்லவில்லை
வழக்கமாக ஒருநாளில் அதிகப்பட்சமாக இரண்டனை மணிநேரங்கள் மட்டுமே தான் மொபைல் போனில் நேரம் செலவழிப்பதாகவும் ஆனால் இந்த ஆறு நாட்களும் குறைந்தபட்சம் 6 மணிநேரங்கள் செலவழித்ததாக அஸ்வின் தெரிவித்தார். தன்னால் புத்தகங்களை வாசிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். இதனிடையே, கொரோனா பாதிப்பின்றி அனைத்து டெல்லி கேபிடல்ஸ் வீரர்களும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.