2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் துவங்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடர் கால வரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்தாவிட்டால் சுமார் 5,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை சிக்கல்
அதனால், ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. 2020 டி20 உலகக்கோப்பை தொடர் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.
காலம் தாழ்த்தும் ஐசிசி
ஆனால், டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிடாமல் ஐசிசி காலம் தாழ்த்தி வருகிறது. இது தான் ஐபிஎல் தொடருக்கு இருக்கும் முக்கிய சிக்கல். இது மட்டுமின்றி தொடரை இந்தியாவில் நடத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 30,000க்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனி வரும் நாட்களில் லாக்டவுன் விதிகள் இந்தியாவில் கடுமையாகவும் வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டில் நடத்த வாய்ப்பு
இந்த நிலையில், வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. இந்தியாவில் இருக்கும் சிக்கலகளை மனதில் கொண்டு வெளிநாட்டில் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
எந்த நாட்டில்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த பிசிசிஐ பேசி வருவதாக கடந்த சில நாட்கள் முன்பு தகவல் வெளியானது. அங்கே துபாய் மற்றும் ஷார்ஜா என இரு மைதானங்கள் உள்ளன. மேலும், அங்கே கொரோனா வைரஸ் பாதிப்பும் குறைவாகவே உள்ளது.
அரசு அனுமதி
வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தவும் இந்திய அரசு அனுமதி வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுத்து வருகிறது. இந்தியாவில் நடத்தாமல் வெளிநாட்டில் தொடரை நடத்த கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் காரணம் இல்லை.
என்ன காரணம்?
இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்தினால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே ஐபிஎல் நடத்துவதாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பலாம். சமூக வலைதள எதிர்ப்பு என்பதை தாண்டி பொது நல வழக்குகள் போடவும் வாய்ப்பு உள்ளது.
எதிர்ப்பு கிளம்புமா?
வழக்குகளில் ஐபிஎல் சிக்கினால் அது மேலும் குழப்பத்தை உண்டாக்கும். அதை தவிர்க்கவே பிசிசிஐ வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என எண்ணி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஐபிஎல் நடத்தினால் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்புமா?