வயதான வீரர்
ஐபிஎல் தொடரில் மிக அதிக வயதில் ஆடிய வீரர் பிரவின் டாம்பே. அவர் 2013ஆம் ஆண்டு 41 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். அதன் பின் 2016 வரை ஐபிஎல் தொடரில் ஆடி உள்ளார். கடைசியாக குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.
2020 ஐபிஎல்
அதன் பின் ஐபிஎல் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், மாநில அணியில் இடம் பெற்று உள்ளூர் போட்டிகளில் கூட ஆடினார். இந்த நிலையில், 2020 ஐபிஎல் ஏலத்தில் 48 வயதான அவரது பெயரும் இடம் பெற்றது.
அபுதாபி டி10 கிரிக்கெட் லீக்
அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அதன் பின்னர் தான் சர்ச்சை வெடித்தது. அவர் 2018ஆம் ஆண்டு அபுதாபி டி10 கிரிக்கெட் லீக் தொடரில் ஆடி இருந்தார். அதுதான் அவருக்கு சிக்கலை உண்டாக்கியது.
பிசிசிஐ விதி
பிசிசிஐ விதிப்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிக்காமல் வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் ஆட முடியாது. அவர்கள் ஐபிஎல் தொடரிலும் சேர்த்து ஓய்வு அறிவித்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். பிரவின் டாம்பே ஓய்வு அறிவிக்காமல் வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்றார்.
பிசிசிஐ தடை
இதை அடுத்து ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் அவருக்கு தடை விதித்தது பிசிசிஐ. அவரது நிலையை உணர்ந்து அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்த கொல்கத்தா அணி உரிமையாளர்கள், அவரை கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடச் செய்தனர்.
ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்களால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் அணியான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் அவரை தேர்வு செய்தனர். இந்த சீசனில் பிரவின் டாம்பே மூன்று போட்டிகளில் ஆடினார்.
சிறப்பான பந்துவீச்சு
மூன்று போட்டிகளில் 3 விக்கெட்கள் வீழ்த்திய அவர், ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டினார். அது மட்டுமின்றி களத்தில் அவரது நேர்மறையான அணுகுமுறை இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதை அடுத்து அவரை ஐபிஎல் தொடரிலும் இடம்பெறச் செய்ய முடிவு செய்தது கொல்கத்தா அணி.
உதவியாளர்
அவரை வீரராக சேர்க்க முடியாத நிலையில், அவரை உதவியாளராக அணியில் சேர்த்து இருக்கிறது அந்த அணி. இதை பிசிசிஐ தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகள் கூறுவார் என அந்த அணி தெரிவித்துள்ளது.