வயதான கிரிக்கெட் வீரர்
48 வயதான பிரவின் டாம்பே ஐபிஎல் தொடரில் ஆடிய மிக வயதான வீரர் ஆவார். கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் அவர், களத்திலும் ஆட வேண்டும் என முயற்சி செய்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2013 ஐபிஎல் தொடரில் தன் முதல் ஐபிஎல் போட்டியில் ஆடினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த மூன்று சீசன்களில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை. இந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியது. அப்போது பலரும் அவரை வாங்கியதை வைத்து கொல்கத்தா அணியை கிண்டல் செய்தனர்.
விக்கெட்கள்
எனினும், பந்துவீச்சாளரான பிரவின் டாம்பே கடந்த சீசன்களில் ஓரளவு சிறப்பாகவே பந்து வீசி இருந்தார். 33 ஐபிஎல் போட்டிகளில் 28 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். 2014ஆம் ஆண்டில் மட்டும் 15 விக்கெட்கள் வீழ்த்தினார். அது அவரின் சிறப்பான செயல்பாடாகும்.
மூன்று அணிகள்
இது வரை மூன்று ஐபிஎல் அணிகளில் ஆடி உள்ளார் பிரவின் டாம்பே. ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என மூன்று அணிகளில் பங்கேற்று ஆடி உள்ளார். நான்காவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆட இருந்த நிலையில் சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்.
டி10 தொடர் சாதனை
கடந்த வருடம் அபுதாபியில் நடைபெற்ற டி10 எனப்படும் பத்து ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார் பிரவின் டாம்பே. அந்த தொடரில் சிந்தி என்ற அணிக்காக ஆடினார். மேலும், டி10 தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் பிரவின்.
சிக்கல்
அவர் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், பிசிசிஐ விதிப்படி அவர் விதிமீறல் செய்துள்ளார் என கூறப்படுகிறது. பிசிசிஐ விதிப்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் ஒருநாள், மூன்று நாள், நான்கு நாள் மற்றும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் உரிய அனுமதியுடன் ஆடலாம்.
என்ன விதி?
ஆனால், 20 ஓவர் அல்லது அதற்கும் குறைவான ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை. ஐபிஎல் உட்பட பிசிசிஐ நடத்தும் தொடர்கள் அல்லது பிசிசிஐயின் அணிகளில் ஒன்றில் ஆட வேண்டும் என்றால், பிற நாடுகளில் நடைபெறும் டி20 அல்லது டி10 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்கக் கூடாது.
யுவராஜ் சிங் நிலை
யுவராஜ் சிங் கூட 2019ஆம் ஆண்டு தன் ஓய்வை அறிவித்த பின் டி10 தொடரில் பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்று வருகிறார். அவர் இனி ஐபிஎல் தொடரில் ஆட முடியாது எனபது குறிப்பிடத்தக்கது.
மற்றவர்களும் வருவார்கள்
ஒருவேளை தற்போது பிரவின் டாம்பேவுக்கு அனுமதி அளித்தால், அடுத்து பல வீரர்களும் அனுமதி கேட்டு வருவார்கள். யுவராஜ் சிங் கூட அடுத்து அனுமதி கேட்கலாம். எனவே, பிரவின் டாம்பேவுக்கு நிச்சயம் ஐபிஎல் தொடரில் ஆட அனுமதி இல்லை என மறுத்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.