என்ன நடந்தது
பஞ்சாப் பவுலிங்கின் 8வது ஓவரின் 4வது பந்தில் முருகன் அஸ்வின் பந்தை ஸ்மித் பறக்கவிட்டார். பேக்வேர்ட் ஸ்கோயர் லெக் நோக்கி பந்தை ஸ்மித் பறக்கவிட்டார். கண்டிப்பாக இந்த ஷாட் சிக்ஸ் நோக்கிதான் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு வேகமாக ஓடிவந்த நிக்கோலஸ் பூரான் வேகமாக தாவி, பந்தை ஒரு கையால் பிடித்தார். அதுவும் சிக்ஸ் லைனுக்குள் தாவி குதித்து, காலை கீழே வைக்காமல், பந்தை பிடித்தார்.
ஆனால் என்ன
ஆனால் கீழே விழுவதற்கு முன் பந்தை இன்னொரு கைக்கு மாற்றி, அந்த பந்தை தூக்கி எறிந்தார். பந்து சிக்ஸ் செல்ல கூடாது என்று வேகமாக அதை தூக்கி எறிந்து சேவ் செய்தார். இதில் ஸ்மித் ஒரே ஒரு ரன்தான் எடுத்தார். இந்த சேவ் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பூரான் பருந்து போல பறந்து வந்து பந்தை பிடித்துள்ளார் என்று பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர்.
பாராட்டு
நேற்று நிக்கோலஸ் பூரான் பிடித்த இந்த கேட்சை ஜாண்டி ரோட்ஸ் தொடங்கி சச்சின் டெண்டுல்கர் வரை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் இதே பூரான்தான் இனி கிரிக்கெட்டே விளையாட கூடாது என்று சில வருடங்கள் முன் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆம்.. நீங்கள் இனி கிரிக்கெட் விளையாட முடியாது. இனி நீங்கள் களத்திற்கு செல்வது கஷ்டம் என்று மருத்துவர்கள் இவருக்கு 2015ல் மருத்துவர்கள் எச்சரிகை விடுத்து இருந்தனர்.
ஏன் இப்படி?
கடந்த 2015ல் இவர் சர்வதேச அணிக்கு தேர்வாகும் முன் கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்தார். 2015 ஜனவரியில் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது, இவர் கார் விபத்தில் சிக்கி உள்ளார். இதில் இவரின் இரண்டு கால்களும் கடுமையாக காயம் அடைந்து எலும்புகள் முறிந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று இவரை மோதி தூக்கி வீசி உள்ளது.
கால் முறிவு
அதன்பின் இவரால் தனது காலை நகர்த்த கூட முடியவில்லை. முட்டி எலும்பு, விரல் எலும்புகள் என்று காலில் பல இடங்களில் இவருக்கு எலும்புகள் முறிந்துள்ளது. இவரை அப்போது சோதனை செய்த மருத்துவர்கள், நீங்கள் சில மாதங்கள் கழித்து எழுந்து நடக்கலாம். ஆனால் உங்களால் ஓட முடியாது. உங்களால் தாவ முடியாது என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இனி முடியாது
கடைசியாக.. உங்களால் இனி கிரிக்கெட் விளையாட முடியாது. உங்களுக்கே அது ஆபத்தாக முடியும் என்று கூறியுள்ளனர். அதோடு காலில் இவருக்கு 4 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். காலில் சில இடங்களில் சின்ன சின்ன பிளேட்களை வைத்துள்ளனர். இதன் காரணமாக 18 மாதங்கள் இவர் படுத்த படுக்கையாக இருந்தார். ஆம் ஒன்றரை வருடம் இவர் படுத்தப்படுக்கையாக இருந்தார்.
மீண்டும் கொஞ்சம்
அதன்பின் 2017ல்தான் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தனது பயிற்சியை தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கி, தனது காலை சரி செய்துள்ளார். தினமும் நடைப்பயிற்சி, ஓட்ட பயிற்சி எடுத்து, தனது கால்களுக்கு பலம் சேர்த்து இருக்கிறார். அதன்பின் மேற்கு இந்திய தீவுகளின் ஏ அணிக்கு விளையாடி, தன்னை நிரூபித்து உள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள்
2019ல் மேற்கு இந்திய தீவுகளுக்காக விளையாடினார். இவர் விக்கெட் கீப்பர் என்பதால் பெரிய அளவில் ஓட வேண்டியது இல்லை. பேட்டிங் செய்யும் போது மட்டுமே இவர் ஓடி இருக்கிறார். ஆனால் நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் பீல்டிங் செய்தார். அப்படி பீல்டிங் செய்யும் போதுதான் நேற்று உலகின் சிறந்த சேவிங்கை இவர் செய்தார். ஜாண்டி ரோட்ஸ் எழுந்து நின்று கைதட்டி அந்த சேவிங்கை நேற்று இவர் செய்தார்.
ஓடவே முடியாது
ஒரு காலத்தில் நீங்கள் ஓடவே முடியாது என்று டாக்டர்கள் கூறிய நபர்தான் நேற்று பறந்து பறந்து கேட்சைகளை பிடித்து இருக்கிறார். எதை செய்ய முடியாது என்று கூறினார்களோ அதையே செய்து தன்னை நிரூபித்து உள்ளார் பூரான்.. ராகுல் திவாதியாவின் டென்ஷன் இல்லாத பேட்டிங் தொடங்கி தன்னம்பிக்கை தரும் பூரான் பீல்டிங் வரை.. நேற்றைய போட்டி பல விஷயங்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கற்றுக்கொடுத்து உள்ளார். 2020 போன்ற மோசமான ஒரு வருடத்தில் இப்படி ஒரு ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது!