எப்படி பேட்டிங்
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து பஞ்சாப் அணியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. முதலில் களமிறங்கிய கே. எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு பக்கம் கே. எல் ராகுல் கொஞ்சம் நிதானமாக ஆட இன்னொரு பக்கம் மயங்க் மாயம் செய்தார். மொத்தம் 50 பந்துகள் பிடித்த மயங்க் 106 ரன்கள் எடுத்தார்.
எத்தனை ரன்கள்
இந்த போட்டியில் மட்டும் மயங்க் அகர்வால் 10 பவுண்டரி 7 சிக்ஸர் என்று ராஜஸ்தான் பவுலிங்கை புரட்டி எடுத்தார். இன்னொரு பக்கம் கே. எல் ராகுலும் வேகம் எடுத்தார். 54 பந்துகள் பிடித்த கே.எல் ராகுல் 69 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரி, 1 சிக்ஸர் என்று இவரும் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார்.
அடுத்தடுத்த வீரர்கள்
அடுத்து களமிறங்கிய பூரான் 3 சிக்ஸர் அடித்து வெறும் 8 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் 9 பந்தில் இரண்டு பவுண்டரி போட்டு 13 ரன்கள் எடுத்தார். மொத்தமாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 223 ரன்கள் எடுத்து மைதானத்தில் பேட்டிங் பாகுபலியாக வலம் வந்தது.
ஆனால் சிஎஸ்கே
ஆனால் இன்று பஞ்சாப் பேட்டிங் ''சம்ஹாரம்'' செய்த அதே சார்ஜா மைதானத்தில்தான் கடந்த முறை சென்னை படு மோசமாக சொதப்பியது. இன்று பஞ்சாப் அதிரடி ஆட்டம் ஆடிய இதே மைதானத்தில்தான் கடந்த முறை சென்னை டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல டொக் வைத்து ஆடியது. சென்னையும் ராஜஸ்தானை எதிர்கொண்டுதான் இங்கு பேட்டிங் செய்தது.
மோசமான பேட்டிங்
இதே மைதானத்தில்தான் சென்னையின் முரளி விஜய், வாட்சன், ஜடேஜா, தோனி என்று எல்லோரும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். சென்னை 200 ரன்கள் எடுத்தாலும் கூட ஆமை வேகத்தில் மட்டுமே ஆடியது. அதுவும் கூட டு பிளசிஸ் அன்று அதிரடியாக ஆடியதால் சென்னையால் 200 ரன்களை எடுக்க முடிந்தது. இதே மைதானத்தில்தான் ராஜஸ்தானின் சஞ்சு சாம்சன் 74 ரன்கள் எடுத்தார்.
சென்னை சொதப்பல்
சென்னை ராஜஸ்தான் பவுலிங்கிற்கு எதிராக எங்கே சொதப்ப்பியது என்பதை பார்த்து இன்று பஞ்சாப் கவனமாக ஆடியுள்ளது. ராஜஸ்தான் பவுலிங்கில் சென்னை சுருண்டது போல பஞ்சாப் ஒடுங்கவில்லை. சென்னையின் தவறுகளை கவனித்து பஞ்சாப் அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்துள்ளது. மிக சின்ன மைதானம், சுற்றி விட்டால் சிக்ஸ் செல்லும், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச். ஆனாலும் கூட சென்னை அணியால் சார்ஜாவில் சேசிங் செய்து வெல்ல முடியவில்லை.
சென்னை ஏன் இப்படி
இந்த போட்டிக்கு பின் பிட்ச் கை கொடுக்கவில்லை என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இன்றைய போட்டியை பார்த்தால், பிட்ச் மீது தவறில்லை, சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மீதுதான் தவறு என்று உறுதியாகிறது. இதனால் சிஎஸ்கே அணி பிட்ச் மீது பழியை போடுவதற்கு பதில், அணியில் அதிரடியாக மாற்றங்களை செய்ய வேண்டும்.. உடனே ஓப்பனிங் வீரர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.