பாண்டிங் உழைப்பு
பல சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் இருந்தது டெல்லி அணி. தற்போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் கடும் உழைப்பு மற்றும் திட்டங்களால் அந்த அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ்
2008 ஐபிஎல் முதல் 2018 ஐபிஎல் தொடர் வரை டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது டெல்லி ஐபிஎல் அணி. அதுவரை அந்த அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரசிகர்களே இல்லாத அணியாக கூட மாறியது.
ஸ்ரேயாஸ் ஐயர்
நிலைமை மோசமான நிலையில் அதிரடி முடிவாக 2018 ஐபிஎல் தொடரில் பாதியில் கேப்டன் கவுதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நீண்ட கால அடிப்படையில் பல மாற்றங்களை செய்தார்.
பெயர் மாற்றம்
2019 ஐபிஎல் தொடரில் பெயரை மாற்றினாலாவது டெல்லி அணியில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றியது அணி நிர்வாகம். அந்த சீசனில் டெல்லி அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதற்கு பெயர் மாற்றம் மட்டுமே காரணம் இல்லை.
கங்குலி திட்டங்கள்
ரிக்கி பாண்டிங் உடன் சேர்ந்து அணியின் ஆலோசகராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் டெல்லி அணியில் பல திட்டங்களை செயல்படுத்தினார். இளம் வீரர்களை ஊக்குவித்தார். 2020 ஐபிஎல் தொடருக்கு ரஹானே மற்றும் அஸ்வின் என இரண்டு முக்கிய வீரர்களை மற்ற அணிகளில் இருந்து டெல்லி அணிக்கு மாற வைத்தார்.
பாண்டிங் உழைப்பு
கங்குலி பிசிசிஐ தலைவரானதால் 2020 ஐபிஎல் தொடரில் அவர் இல்லாத நிலையில், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனி ஆளாக அணியை தன் தோளில் சுமந்தார். பல திட்டங்களை வகுத்து, தோல்விகளின் இடையே துவண்டு விடாமல் அணியை பிளே-ஆஃப் வரை முன்னேற வைத்து, தற்போது இறுதிப் போட்டிக்கும் முன்னேற வைத்துள்ளார்.
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் பாதியில் தொடர் வெற்றிகளால் முன்னணியில் இருந்தது. பின்னர் இரண்டாம் பாதியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. எனினும், லீக் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்து, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
மும்பையை பழி தீர்க்க வாய்ப்பு
முதல் தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த அந்த அணி, அடுத்து இரண்டாம் தகுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில், தன் முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி அணி காலடி எடுத்து வைத்துள்ளது. அதில் முதல் தகுதிப் போட்டியில் தங்களை வீழ்த்திய மும்பை அணியை பழி தீர்த்து ஐபிஎல் கோப்பை வெல்ல அந்த அணிக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடைசி அணி
ஐபிஎல் தொடர் 2008இல் துவங்கிய போது இடம் பெற்ற எட்டு அணிகளில் டெல்லி அணி மட்டுமே 12 ஆண்டுகள் கழித்து தன் முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. மற்ற ஏழு அணிகளும் இதற்கு முன்பே இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஏழாவது அணியாக பஞ்சாப் அணி 2014இல் இறுதிப் போட்டியில் ஆடி இருந்தது.