முதல் தகுதிச்சுற்றில் தோல்வி
டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் துவக்கம் முதலே சிறப்பான போட்டிகளை தந்த போதிலும் சமீபத்திய சில போட்டிகளில் சொதப்பியது. ஆயினும் பிளே-ஆப் சுற்றில் இரண்டாவது இடத்தில் நிலை கொண்டது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய டெல்லி அணி மிக மோசமாக தோல்வியுற்றது.
சன்ரைசர்ஸ் -டெல்லி அணிகள் மோதல்
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது டெல்லி அணி. இதனிடையே, ஐபிஎல்லின் ஆரம்ப லீக் போட்டிகளில் சொதப்பினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு, எலிமினேட்டர் சுற்றிலும் சிறப்பாக விளையாடி தற்போது 2வது தகுதிச்சுற்று போட்டியில் விளையாடவுள்ளது சன்ரைசர்ஸ் அணி.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இன்றைய ஐபிஎல்லின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அவர் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ள நிலையில், அந்த அணி குறித்த புரிதல் அவருக்கு ஏற்கனவே இருக்கும்.
முன்னாள் பேட்டிங் கோச் உறுதி
இந்நிலையில் தேவை ஏற்படும் போதெல்லாம் ஷிகர் தவான் நெருப்பாக விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கேம் பிளான் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்தர பௌலர் ரஷீத் கானை சமாளிக்கும் விதம் குறித்து தவானுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான பங்களிப்பை அளிப்பார்
உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ள ஷிகர் தவான் இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு தேவையான ஆட்டத்தை அளிப்பார் என்றும் பாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.