பஞ்சாப் அணி வெற்றி
நேற்றைய ஐபிஎல்லின் 43வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே பஞ்சாப் அணியின் பௌலர்கள் மாற்றியுள்ளனர்.
5வது இடத்திற்கு பஞ்சாப் முன்னேற்றம்
கடைசி 2 ஓவர்களில் ஐதராபாத் அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளனர். தொடர்ந்த இந்த 4வது வெற்றி மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 127 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் சுருண்டது.
அணி வீரர்கள் குறித்து ராகுல் பாராட்டு
இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளை பெற்றுள்ளது பஞ்சாப் அணி. தொடரின் முதல் பாதியில் வெற்றியை வழக்கமாக கொள்ளாத நிலையில், தற்போது தொடர் வெற்றிகளை பரிசாக கொடுத்துவரும் அணி வீரர்கள் தன்னை பேச்சில்லாமல் ஆக்கியுள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார்.
ராகுல் பாராட்டு
இந்த வெற்றிகளுக்கு கும்ப்ளே, ஆன்டி உள்ளிட்ட பயிற்சியாளர்கள் முக்கிய காரணம் என்றும் அவர் புகழ்ந்துள்ளார். இதனிடையே தங்களின் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசியதாகவும் ஆனால் அது பலன் கொடுக்கவில்லை என்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தோல்வியை கடந்து செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.