நெருங்கிய நண்பர்கள்
ரெய்னாவும் தோனியும் 10 வருடத்திற்கு மேல் நெருக்கமான நண்பர்கள் என்றுதான் கூற வேண்டும். ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை முன்னேற்றம் அடைய தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய காரணமாக இருந்தவர் தோனி. ரெய்னா இந்திய அணியில் சிறப்பாக உருவெடுக்கவும் ரெய்னா முக்கிய காரணமாக இருந்தார். இதனால் சிஎஸ்கே அணியிலும் ரெய்னாவிற்கு தோனி முக்கியத்துவம் கொடுத்தார்.
ஒன்றாக ரிட்டையர்
இவர்கள் இருவர் மட்டுமன்றி.. இவர்களின் குடும்பமும் மிகவும் நெருக்கம். ரெய்னாவும் தோனியும் எந்த அளவிற்கு நெருக்கம் என்றால் தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் ரெய்னாவும் ஓய்வு பெற்றார். தோனியை பின்பற்றி ஓய்வு பெறுகிறேன் என்று ரெய்னாவும் அறிவித்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை விட தோனியுடனான நட்பை அந்த அளவிற்கு மதிக்க கூடியவர் ரெய்னா.
ஆனால் சண்டை
ஆனால் இவ்வளவு நெருக்கமாக இருந்த ரெய்னா - தோனி இடையே பால்கனி காரணமாக இந்த வருடம் பிரச்சனை வந்தது. சரியாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் ரெய்னா தொடரில் இருந்து வெளியேறினார். கொள்ளையர்கள் மூலம் ரெய்னாவின் உறவினர்கள் கொல்லப்பட்டது இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது.
சண்டை
அதேபோல் சிஎஸ்கே நிர்வாகத்துடன் இவருக்கு மோதல் என்றும், அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் உடன் ரெய்னாவிற்கு கருத்து வேறுபாடு என்றும் தகவல்கள் வந்தது. தனக்கு பால்கனி ரூம் கிடைக்கவில்லை என்று ரெய்னா சண்டை போட்டதாக கூறப்பட்டது. தனக்கு சரியான ஹோட்டல் அறை கொடுக்கவில்லை, அணியில் தனக்கு மரியாதை இல்லை என்று இவர் சண்டை போட்டதாக தகவல் வந்தது.
உரிமையாளர் என்ன சொன்னார்
சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் ரெய்னாவை விமர்சனம் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதோடு தோனிக்கும் ரெய்னாவிற்கு கருத்து வேறுபாடு என்று நிறைய செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறுகிறார்கள். ஐபிஎல் தொடர் முழுக்க ரெய்னா குறித்து தோனி எதுவும் பேசாமல் தொடர்ந்து தவிர்த்து வந்ததும் இந்த மோதல் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
ரெய்னா டிவிட்
ஆனால் இன்னொரு பக்கம் ரெய்னா எப்போதும் போல தோனியை பாராட்டியும், சிஎஸ்கே அணியை பாராட்டியும் டிவிட் செய்து வந்தார். சிஎஸ்கே அணியின் வெற்றியை தன்னுடைய வெற்றி போலவே கொண்டாடினார். அதேபோல் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த போது, அந்த அணிக்காக டிவிட்டரில் ஆதரவாக பேசி வந்தார்.
சந்தேகம்
2020ம் வருடம் ரெய்னாவின் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான வருடமாக மாறியுள்ளது. தோனி -ரெய்னா நட்பில் இந்த வருடம் பெரிய பிளவே ஏற்பட்டுள்ளது. அடுத்த வருடம் இவர் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார். ஆனால் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகம்தான். அடுத்த வருடம் பெரிய அளவில் ஏலம் நடக்கும் என்பதால் இவர் சிஎஸ்கே அணிக்கு மீண்டு வருவாரா என்பது கேள்வியாக உள்ளது.